தைவான் நாட்டில் திருவள்ளுவருக்கு சிலைகள் திறப்பு.. 2 நாட்கள் கோலாகல மாநாடு.. அசத்திய தமிழ்ச் சங்கம்
தைபே: தைவானில், திருவள்ளுவர் மாநாடு கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதில், திருவள்ளுவருக்கு சிலைகள் திறக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.
தைவான் நாட்டில் தமிழ்ச் சங்கம் சிறப்பாக இயங்கி வருகிறது. இச் சங்கம் சார்ப்பில் திருவள்ளுவர் மாநாடு கடந்த19 மற்றும் 20ம் தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. இதுகுறித்து தைவான் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை.
தைவான் தமிழ் சங்கம், உலகத் தமிழ்சங்கம் மற்றும் பாரதி தமிழ் சங்கம் இணைத்து கிழக்காசிய நாடுகளில் ஒன்றான எழில்மிகு நாடான தைவானில் திருவள்ளுவருக்கு ஆளுயர சிலைகள் அமைத்து திருவள்ளுவர் மாநாடு கடந்த (19-10-2019 மற்றும் 20-10-2019) நாட்களில் சிறப்பாக நடைபெற்றது.
அந்தரத்தில் தொங்கும் மீன்... பிளாஸ்டிக் மறு சுழற்சி.. வித்தியாசமான விழிப்புணர்வு.. அசத்தும் புதுவை
2 நகரங்களில் திருவள்ளுவர் சிலை
தைவானில் ஹுவாலியன் (Hualian) மற்றும் தைபே (Taipei) நகரங்களில் செவாலியே, கலைமாமணி வி. ஜி. சந்தோஷம் அளித்த இரு திருவள்ளுவர் சிலைகள் தமிழக பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் கவிஞர் யூசி, வி. ஜி. சந்தோஷம், லோக்சபா உறுப்பினர் பாரிவேந்தர், சபாநாயகர் சிவக்கொழுந்து, இந்திய- தைபெய் தூதரகத்தின் முதன்மை இயக்குனர் உயர்திரு ஸ்ரீதரன் மதுசூதனன், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர், முனைவர் ஜி.விசயராகவன் ஆகியோரின் கரங்களால் இனிதே திறந்து வைக்கப்பட்டது.
பல துறையினர்
இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் டி.என்.வள்ளிநாயகம், மயிலை பாரதியார் மன்ற தலைவரும் மூத்த வழக்கறிஞருமான, .ஆா்.காந்தி, ஆசுகவி பாரத் பல்கலைக்கழக முதல்வர் - பேராசிரியர்.கரு.நாகராஜன், கர்நாடக இசைப் பாடகர் கலைமாமணி, .டி.கே.எஸ்.கலைவாணன், மல்லைத் தமிழ்ச் சங்க தலைவர் மற்றும் ம.தி.மு.க.துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பங்கேற்றனர்.
தமிழ் ஆர்வலர்கள்
இதேபோன்று, தமிழறிஞர் சிலம்பொலி செல்வர் ம.பொ.சி.அவர்களின் மகள் ம.பொ.சி. மாதவி பாஸ்கரன், வ.வு.சி அவர்களின் கொள்ளுப்பேரன் ப.முத்துக்குமாரசுவாமி, வரலாற்று ஆவணப்பட இயக்குனரும் முனைவர் ரவி குணவதி மைந்தன் உட்பட பல்வேறு தமிழறிஞர், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தைவான் தமிழ் வாழ் நெஞ்சங்கள், இளநிலை, முதுநிலை, மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புசெய்தனர்.
ஆய்வுக் கட்டுரை
மேலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பல அறிஞர்கள் அனைவரும் பல்வேறு புத்தகங்களை தைவான் தமிழ்சங்க நூலகத்திற்கு கொடுத்து சிறப்பு செய்தனர்.
நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள், மாணவர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளை முனைவர் உலகநாயகி & முனைவர் க.திலகவதி ஆகியோர் தொகுத்து, எழுதிய "தைவானில் திருவள்ளுவர்'' என்ற புத்தகத்தை லோக்சபா உறுப்பினர் பாரிவேந்தர் வெளியிட வி. ஜி. சந்தோஷம் பெற்றுக்கொண்டார்.
மாணவர்களுக்கு சான்றிதழ்கள்
நிகழ்வின் முத்தாய்ப்பாக ஆராச்சி மாணவர்களான ராம்கி சேட்டு, தங்கராஜி, ராஜா நேரு, கிறிஸ்டி ரோஷினி மாறும் பிஸ்வ பிரதாப்சிங் ஆகியோருக்கு வருடம்தோறும் வழங்கப்பட்டு வரும் இளம் ஆராய்ச்சியாளர் விருது அளிக்கப்பட்டது. இதனுடன் தைவான் தமிழ் சங்கத்தின் "விழுதுகள்" பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பல்வேறு இளம் மாணவ, மாணவியர் ஆகியோரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
தமிழ்ச்சங்கம் ஏற்பாடு
இவ்விழாவானது கவிஞர் யூசி தலைமையில் தைவான் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் இரமேஷ் பரமசிவம், பொன்முகுந்தன், முனைவர் பிரசண்ணன், முனைவர் விநாயகம், தில்லை நாயகம் ஆகியோரின் அயராத உழைப்பில் இனிதே நடைபெற்றது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.