மியான்மர் எல்லையான மணிப்பூர் மோரே நகரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
மணிப்பூர் மாநிலத்தின் மோரே நகர் தமிழ்ச்சங்கத்தில் தமிழறிஞர்கள் கலந்துகொள்ளும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது.
மோரே: மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் எல்லையில் உள்ள மோரே நகரில் செயல்பட்டு வரும் தமிழ்சங்கத்தில்,தஞ்சாவூர் தமிழ்த்தாய் அற்க்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.
மோரே தமிழ்ச்சங்கத்திற்கு தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில், 640 கிலோ எடையும், மூன்றரை அடி உயரமும் கொண்ட திருவள்ளுவர் சிலை அன்பளிப்பாக வழங்கப்படுகிறது. இந்த சிலை திறப்பு விழா வருகிற 31ம் தேதி சனிக்கிழமை மோரே தமிழ்ச்சங்கத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கு மோரே தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சேகர் வாழ்த்துரை வழங்க, விழுப்புரம் மாவட்ட தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் துரை.இராசமாணிக்கம் தலைமை தாங்குகிறார். திருவள்ளுவர் சிலையை புதுவை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கலைமாமணி முத்து திறந்து வைக்கிறார்.
ஐதராபாத் திருவள்ளுவர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் இரா.இராசமாணிக்கம், பெங்களூருவைச் சேர்ந்த தமிழறிஞர் தட்சிணாமூர்த்தி, அரிமா சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கிறார்கள்.