சவுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்
தம்மாம்: சவுதி அரேபியாவின் தம்மாம் மண்டலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக "தம்மாம் சென்ட்ரல் மருத்துவமனையில்" 48வது மாபெரும் ரத்த தான முகாம் கடந்த 27ம் தேதி அன்று நடைபெற்றது.
விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையில் தங்களது சொந்த வேலைகளையும் விட்டுவிட்டு மனித நேயம் பேண மதியம் 12.30 மணி முதல் மாலை 6:00 மணி வரை காத்திருந்து ரத்த தானம் செய்தனர். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பிற மாநில மக்களும், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் ரத்ததானம் செய்தனர்.
இந்த முகாமில் 123க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு, உடல் தகுதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் 116 யூனிட் ரத்ததானம் செய்தனர். முன்னதாக கலந்து கொண்டவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் எண்ணிக்கை போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் நடத்திய 48வது ரத்த தான முகாமாகும். இதுபோன்ற முகாம்கள் மட்டுமின்றி அவசர தேவைகளுக்காகவும் ரத்ததானம் வழங்கப்பட்டு வருகின்றது.
அதிகமானோர் ரத்ததானம் செய்ததில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் தொடர்ந்து பல வருடங்களாக முதலிடத்தில் இருந்து பல விருதுகளை பெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அது போல, சவுதி அரேபியாவிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரத்த தானம் செய்வதில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது.
இது போன்ற முகாம்கள் மனித நேயத்தை வெளிப்படுத்துவதாகவும், சகோதரத்துவத்தை நிலைநாட்டும் வகையிலும் அமைந்திருந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து இதுபோன்ற முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.