காடுகளை காப்போம் #internationaldayofforests
பூமித்தாய்க்கு பிடித்த பசுமை போர்வை
கொஞ்சம் கொஞ்சமாய் பிய்த்து பிய்த்து
அவள் மேல் கட்டுகிறோம் கட்டிடங்களின் கலவை
அஸ்திவாரம் போட ஆயிரம் ஆயிரம் துளைகள்
பாரம் தாங்காமல் அவள் ஆடும் இடமெல்லாம்
பூகம்பமாய் மாறி நம்மையே விழுங்கும்
ஒரு பங்கு நீர் ஒரு பங்கு நிலம்
ஒரு பங்கு காடுகளின் பசுமை
இதுவே நல்ல விகிதாச்சாரம்
புரிந்தாலும் விழித்து கொண்டே
உறங்குவது போல் நடிக்கின்றோம்
பசுமரங்களை வெட்டி வெட்டி சாய்க்கின்றோம்
வாசம் செய்யும் விலங்குகளை
விரட்டி விரட்டி அடிக்கின்றோம்
அவைகள் வாழ எங்கே செல்லும்
சிறிதளவும் நினைக்க மறுக்கின்றோம்
கொஞ்சமாவது சிந்திப்போம்
எப்போதும் ஆறறிவு நமக்குதான் என்று
பெருமையுடன் அணிவகுக்கும் நாம்
சுயநலமே முதன்மையாய் நிலைப்படுத்தி
எப்போதும் செயல்படும் நாம்
காடுகள் பற்றியும்
சுயநலமாகவே சிந்திப்போம்
காடுகள் இல்லையேல் மழை இல்லை
அட பூமி தாயின் போர்வை பற்றி நாம்
கவலை பட தேவையில்லை
காரணம் கணக்கிலடங்கா மரங்களை
வெட்டுவதால் கணக்கில்லாமல்
காசு கிடைக்கிறது
கணக்கில்லா மரங்களை வெட்டுவதால்
அடுக்கு மாடிகள் அவ்விடத்தை நிரப்புகிறது
கணக்கில்லா மரங்களை வெட்டுவதால்
விதவிதமாய் மரச்சாமான்கள் கிடைக்கின்றது
எல்லாம் சுயநலம் எல்லாம் சுயநலம்
எல்லையில்லா மனிதனின் சுயநலம்
சுயநலமே முதன்மையாய் நினைக்கும் நாம்
காடுகள் பாதுகாப்பையும் நாம்
சுயநலத்திற்காகவே நினைப்போம்
மரங்கள் இல்லையேல் மழை இல்லை
மழை இல்லையேல் நீர் இல்லை
நீர் இல்லையேல் உயிர்கள் இல்லை
அட மற்ற உயிர்கள் பற்றி அக்கறையில்லை
மனித உயிர்களே இல்லை
காடுகள் அழிந்தால் நம் உயிருக்கே
உத்தரவாதம் இல்லை
ஆகவே நம் உயிர் காக்க
முக்கியமாக அதிமுக்கியமாக
நம் உயிர் காக்க காடுகள் முக்கியம்
கருத்திலே கொள்வோம்
நல்லார் ஒருவர் பொருட்டு
நமக்காக பெய்யும் மழையின்
ஒரு சொட்டு மற்ற உயிர்களையும் காக்கும்
மற்ற உயிர்களின் வாழ்க்கையும்
நம் வாழ்வோடு சக்கரமாய் பிணைந்திருப்பதால்
மற்ற உயிர்களையும் காப்போம்
இதில் நமக்கு மாற்று வழியில்லை
காடுகளை காப்பதினால் மட்டுமே
நாம் நம்மையும் காப்போம்
காடுகளை காப்போம்
பசும் காடுகளை காப்போம்
- சுஜாதா ஜெயராமன்