இயற்கையோடு நாம் 2017: சிலம்பம்.. நிகழ்த்துக் கலை.. இன்னும்.. இன்னும் இனிக்க வைக்கும் நிகழ்ச்சிகள்
இயற்கையோடு நாம் எனும் சூழலியல் கருத்தரங்கில் 2 நாட்களுக்கு சிலம்பம், நிகழ்த்துக் கலை, பாடல் என பல்சுவை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: 'காடு' சுற்றுச்சூழல் இதழும், எம்ஜிஆர் ஜானகி கலைக் கல்லூரியும் இணைந்து நடத்தும் இயற்கையோடு நாம் என்ற சூழலியல் கருத்தரங்கம் சென்னையில் நாளை தொடங்குகிறது.
இயற்கையோடு நாம் பகுத்துண்டு பல்லூயர் ஓம்புதல் என்ற முழக்கத்தோடு நடைபெறும் இந்த நிகழ்ச்சி சனிக்கிழமையான நாளை தொடங்கி 2 நாட்கள் சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் உணவு திருவிழா 2 நாட்களுக்கு நடத்துவது போன்றே கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி அசத்த உள்ளனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
கிராமிய கலை
இந்நிகழ்ச்சியில், கைலாய வாத்தியங்கள் இசை நிகழ்ச்சி, காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரபு இசைக் கருவிகளின் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், பழங்குடி மக்களான இருளர்களின் நிகழ்த்துக் கலையும் அரங்கேற உள்ளது.
சிலம்பம்
அதே போன்று, சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் சிலம்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணி வரை தகரி சிலம்பாட்டக் கலைக்குழுவினர் இந்த நிகழ்ச்சியை நடத்தி பார்வையாளர்களை குதூகலப்படுத்த உள்ளனர்.
கதை சொல்லி…
நிகழ்ச்சிக்கு வரும் சிறுவர்களுக்கு பயன்தரும் வகையிலும் அவர்களை மகிழ்விக்கவும் கதை சொல்லி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மாலை 4.30 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை நடைபெற உள்ளது. குழந்தைகளோடு வந்து மகிழலாம்.
இன்னும் என்னென்ன..
இது தவிர, ஒளிப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 500 புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இதுதவிர, புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு விற்பனையும் நடைபெற உள்ளன.