இயற்கையோடு நாம் 2017: நிலம்.. நீர்.. சுற்றுசூழலை காக்க.. 2 நாள் கருத்தரங்கு சென்னையில் நாளை தொடக்கம்
இயற்கையோடு நாம் எனும் சூழலியல் கருத்தரங்கு நாளை சென்னையில் தொடங்குகிறது. இதில், நிலம், நீர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
சென்னை: 'காடு' சுற்றுச்சூழல் இதழும், எம்ஜிஆர் ஜானகி கலைக் கல்லூரியும் இணைந்து நடத்தும் இயற்கையோடு நாம் என்ற சூழலியல் கருத்தரங்கம் சென்னையில் நாளை தொடங்குகிறது.
இயற்கையோடு நாம் பகுத்துண்டு பல்லூயர் ஓம்புதல் என்ற முழக்கத்தோடு நடைபெறும் இந்த நிகழ்ச்சி சனிக்கிழமையான நாளை தொடங்கி 2 நாட்கள் சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
சூழலியற் கருத்தரங்கு நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் பேச உள்ளனர். தொடக்க விழாவில் நீதிபதி ஜோதிமணி, எம்ஜிஆர் ஜானகி கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் அபிதா சபாபதி, தி இந்து தமிழ் பத்திரிகையின் ஆசிரியர் அசோகன், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் குணசேகரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
பல்வேறு தலைப்புகளில்..
இரண்டு நாட்களில் பல்வேறு தலைப்புகளின் கீழ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இயற்கையோடு இணைந்த வாழ்வு, வளர்ச்சியும் பல்லுயிர் சூழலும், நீர்நிலைகளின் நிலை அன்றும் இன்றும், கரைக்கடலும் கடற்கரையும், மறைந்து வரும் மரங்களும், தாவரங்களும் பாதிக்கப்படும் பல்லுயூர்ச் சூழலும் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதம் நடைபெற உள்ளது.
ஒளிப்படக் கண்காட்சி
நிகழ்ச்சியில் ஒளிப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 500 ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
கலை நிகழ்ச்சிகள்
கிராமிய கலைகள் இங்கே நிகழ்த்தப்பட உள்ளன. கைலாய வாத்தியங்கள் இசை நிகழ்ச்சி, காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரபு இசைக் கருவிகளின் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், பழங்குடி மக்களான இருளர்களின் நிகழ்த்துக் கலையும் அரங்கேற உள்ளது.
உணவு விழா
இந்த கருத்தரங்கில் மாலை 6 மணிக்கு உணவுத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறுதானியங்கள் கொண்டு சமைக்கப்பட்ட உணவு வகைகளில் பஃபே முறையில் பரிமாறப்படுகிறது. சுமார் 70 வகையான மூலிகை செடிகள், அறிவார்ந்த புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.