திருக்குறள் மறை ஓதிய அமெரிக்க மாணவிகள்: அசத்திய சார்ல்ஸ்டன் தமிழர்கள்!
சார்ல்ஸ்டன் (யு.எஸ்). எண்ணிக்கை முக்கியமல்ல செயல்திறன்தான் முக்கியம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சார்ல்ஸ்டன் வாழ் தமிழர்கள் அடுத்தடுத்து சாதனை படைத்து வருகிறார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தமிழ் மொழி என்றால் என்னவென்றே தெரியாத அமெரிக்க பள்ளி மாணவிகளை திருக்குறள் மறை ஓத வைத்து புதிய வரலாறு படைத்துள்ளார்கள்.
காஞ்சிப் பட்டுடுத்தி...
சுமார் இருபது மாணவிகளுக்கு தமிழ் மொழி பற்றியும், திருக்குறள் பற்றியும் எடுத்துக் கூறி, கல்வி அதிகாரத்திலிருந்து அனைத்து குறள்களையும் ஆங்கிலத்தில் பொருளுடன் விளக்கி, தமிழில் படிக்க வைத்துள்ளனர்.
பொங்கல் விழாவின் போது அந்த மாணவிகள், தமிழ்ப் பாரம்பரியத்துடன் சேலை உடுத்தி, பறையிசை முழக்கத்துடன், மறையாக ஓதியதை பார்த்து கேட்ட்து பரவசமான அனுபவமாகும்.
மழலை மொழி போல் ஒலித்த அந்த ஆங்கிலப் பாவைகளின் தமிழ்க் குரலைக் கேட்டிருந்தால் வள்ளுவரும் வாழ்த்தியிருப்பார்.
தமிழ் வளர்க்கும் வளாகம்
சார்ல்ஸ்டன் பனை நிலம் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அனைத்து தமிழ் விழாக்களும் ஆஷ்லி ஹால் பள்ளி வளாகத்தில் நடைபெறுவது வழக்கம். தமிழ் பள்ளியும் வார இறுதியில் அதே வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழ் நிகழ்ச்சிகள், பள்ளி வகுப்புகள் நடைபெறுவதைப் பார்த்து அந்த பள்ளி மாணவிகளுக்கு தமிழ் மீது இயல்பாகவே ஒரு ஈர்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆண்டு தோறும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு தமிழ் மொழி பற்றிய பயிலரங்களும் நடைபெறுகிறது.
கல்வியின் மேன்மையை உணர்த்திய குறள்
இந்த ஆண்டு பொங்கல் விழாவில் தாங்களும் பங்கேற்க வேண்டும் என்று மாணவிகள் விரும்பினார்கள். திருக்குறள் மறை ஓதி சிறப்பியுங்கள் என்று பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
மாண்விகளுக்கு பொருத்தமான கல்வி அதிகாரத்தை தேர்ந்தெடுத்து அத்தனை குறள்களையும் ஆங்கிலத்தில் பொருளுடன் விளக்கம் அளிக்கப்பட்டது.
"இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உங்கள் மொழியில் கல்விக்கு இத்தனை முக்கியத்துவமா?" என்று மாணவிகள் வியந்து விட்டனர்.
அதே ஆச்சரியத்துடன் அனைத்து குறள்களையும் மறையாக ஓதவும் கற்றுக் கொண்டனர்.
1330 குறள் மறையும் தமிழ் மறை வழி திருமணமும்
முன்னதாக பனை நிலம் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 1330 திருக்குற்ள்களும் மறையாக ஓதப்பட்டு, இசைக் கோர்ப்புடன் சி.டி யாக வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அமெரிக்க தம்பதிகளுக்கு தமிழ் மறை ஓதப்பட்டு திருமணம் நட்த்தியுள்ளார்கள். அந்த தம்பதிகள் தங்கள் குழந்தைக்கு ‘துமி (மழைத் துளி)' என்ற தூய தமிழ்பெயரும் சூட்டியுள்ளார்கள்.
இன்று அமெரிக்காவில் பரவலாகியுள்ள பறையிசையை முதன் முதலில் அங்கே அறிமுகப்படுத்தியதும் இந்த தமிழ்ச் சங்கம்தான்.
புதுமை இனிமை
இந்த ஆண்டு பொங்கல் விழாவில் இன்னொரு அம்சமாக ‘ பாட்டி சொல்லும் பாட்டு' என்ற ஒரு நிகழ்ச்சியும் இடம்பெற்றது. ஊரிலிருந்து வந்துள்ள இரண்டு பாட்டிகள் தங்கள் பேரக் குழந்தைகளுக்கு பாட்டு சொல்லித்தரும் விதமாக வித்தியாசமாக அமைந்த்து.
பாட்டியிடம் பாட்டுக் கேட்காத அமெரிக்கக் குழந்தைகளுக்கு, புதிய அனுபவமாக இருந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் வி.சு. பழனிச்சாமி, துணைத் தலைவர் தீபக் சுனில், செயலாளர் சுந்தரவடிவேல் பாலசுப்ரமணியன், பொருளாளர் வளர்மதி குப்புசாமி, கலை நிகழ்ச்சிக் குழு தலைவர் யுவா சம்பந்தம் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தார்கள்.
அமெரிக்காவிலேயே குறைந்த எண்ணிக்கையில் தமிழர்கள் வாழும் ஊர் தென் கரோலைனாவின் இந்த சார்ல்ஸ்டன் நகரம்தான். அங்கே வசிக்கும் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக தமிழ்ச் சங்கத்தை நட்த்தி வருவதுடன் புதுப் புது முயற்சிகளையும் செய்து சாதித்து வருவது பாராட்டுக்குரியதாகும்.
-இர தினகர்