முதல் முறையாக ஜல்லிக்கட்டு நடனம்... 'வால்மார்ட்' தமிழர்களின் மண்வாசனை திருவிழா!
பெண்டன்வில்(யு.எஸ்): வால்மார்ட் தலைமையிடம் அமைந்துள்ள பெண்டன்வில் நகரில், 6 வது ஆண்டு 'மண்வாசனை' பொங்கல் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு நடனம் ஆடி அசத்தினர்.
இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானோர், வால்மார்ட்டில் நேரடியாகவோ அல்லது ஐடி நிறுவனங்கள் மூலமாகவோ வேலை செய்யும் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் ஆவார்கள்.
சுமார் 1200 பேர் கலந்து கொண்ட இந்த விழாவில் கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கும் மேலாக கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றது.
வாழை இலை சாப்பாடு மதிய உணவுடன் விழா ஆரம்பமானது. அங்கே கருமாரியம்மன்
கூழ்கடை, வளையல் கடை என பெண்டன்வில்லுக்கே உரித்தான கடைவீதியும் இருந்தது. சூப்பர் சிங்கர் போட்டியின் இறுதிச் சுற்றும் நடந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே மக்களுடன் மக்களாக, யார் என்று தெரியாத நடுவர்களும், அமர்ந்து மதிப்பீடு செய்து கொண்டிருந்தனர்.
அரங்க நிகழ்ச்சியை பெண்டன் வில் தமிழ் பள்ளி மாணவ மாணவியர், ஆசிரியர்கள், தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கி வைத்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் போல், இந்த ஆண்டும் உள்ளூர் விவசாயிகள் முதலில் கவுரிவிக்கப்பட்டார்கள். தமிழகத்தில் விவசாயிகளை பெருமைப் படுத்தும் வகையில் விழா எடுப்பது குறித்து ஆச்சரியமும் மகிழ்ச்சியையும் அவர்கள் தெரிவித்தார்கள்.
பலதரப்பட்ட பிரபல வசனங்களுக்கு உள்ளூர் தமிழர்களின் நடிப்பில், டப்ஸ்மாஷ் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது.
பல்வேறு நடனப் பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. ஹார்வர்ட் தமிழ் இருக்கை பற்றிய அறிமுகமும், நிதி திரட்டும் முயற்சி பற்றியும் தெரிவித்தார்கள். இந்த ஆண்டு மண்வாசனை விழாவில் திண்டிவனத்திற்கு அருகே உள்ள அன்னம்புத்தூரில் கல்வி, மருத்துவ வசதிகளுக்கு நிதியுதவி செய்கிறார்கள் . மேலும் அங்கே உள்ள ஜல்லிக்கட்டு காளைகள் பராமரிப்பிற்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு நடனம்
இறுதியாக வந்த இரண்டு நடனக்குழுவினர்கள் அரங்கத்தை அதிரச் செய்து விட்டார்கள். வெவ்வேறு விதமான பாடல்களுக்கு வித்தியாசமான நடனங்கள் அமைத்த்திருந்தார்கள்.
Jallikkatu Dance Video
ஜல்லிக்கட்டு நடனம் டைமிங்காகவும் மிகவும் ரசிக்கத் தக்கதாகவும் இருந்தது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மிகப்பிரம்மாண்டமான பேனர் ஒன்று வைத்திருந்தார்கள். ஊர்த் திருவிழாவில் வைத்திருப்பது போலவே இருந்தது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமெரிக்காவில் முதலாவதாக போராட்டம் நடத்தியவர்களில், ரிச்மண்ட், நியூயார்க் மற்றும் பெண்டன்வில் தமிழர்கள் முக்கியமானவர்களாகும். ஜல்லிக்கட்டுக்கு என தனி நடனத்தையே அரங்கேற்றிய பெருமை இந்த அமெரிக்கத் தமிழர்களையே சாரும்.
மண்வாசனை விழாவில், ஆண்டு தோறும் சிறந்த மக்கள் சேவையாளருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறார்கள். இந்த ஆண்டு உமா சங்கருக்கு விருது வழங்கப்பட்டது, அவருடைய பெற்றோர்களை மேடையேற்றி அவர்கள் கைகளாலே வழங்கினார்கள். தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சமுதாயப் பணிகள் ஆற்றிவரும் பெண்டன்வில் வாழ் தமிழருக்கு இந்த விருது வழங்கப் படுகிறது.
அரங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எங்கெங்கு காணினும் மழலைப் பட்டாளமாக இருந்தனர். சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஓடுவதும் ஆடுவதுமாக அங்குமிங்கும் சுற்றிக்கொண்டே இருந்தார்கள்.
அங்கு குழுமியிருந்தவர்களும் பெரும்பான்மையினர் இளைஞர்கள்தான். பொதுவாக இத்தகைய விழாக்களுக்குபெண்கள் பாரம்பரிய உடையில் வருவது வழக்கம்தான். ஆனால் திரும்பிய பக்கமெல்லாம் வேட்டி சட்டையில் ஆண்களைப் பார்த்தது ஆச்சரியமாக இருந்தது. வளாகமே சென்னையின் ஒரு பகுதி போல் வண்ணமயமாயகவும் குதூகலமாக காணப்பட்டது.
ஆனாலும் சென்னையில் ஒரே இடத்தில் இத்தனை பேர்களை வேட்டி சட்டையில் பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்! வேட்டி தினம் பெண்டன்வில்லில் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது போலிருக்கு.
-இர தினகர்