திமுக ஆட்சியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் உருவாக்குவோம்- ஷார்ஜாவில் ஸ்டாலின்
திமுக ஆட்சி அமைந்தவுடன் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் உருவாக்கப்படும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஷார்ஜா: சென்னையில் நேற்று மழையில் நனைந்தேன், இன்று ஷார்ஜாவில் உங்கள் அன்பு மழையில் நனைகிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக ஆட்சி அமைந்தவுடன் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஷார்ஜாவில் நடைபெற்ற 36ஆவது சர்வதேச புத்தக திருவிழாவில் கலந்துகொண்ட திமுக செயல்தலைவர் ஸ்டாலின்,
தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 1000 புத்தகங்களை சார்ஜ புத்தக ஆணைக்குழுவிற்கு அன்பளிப்பாக வழங்கினார்.
விழாவில் பேசிய ஸ்டாலின், ஷார்ஜாவின் அரசர் சுல்தான் பின் முகமது அல் காசிமி வரலாற்று ஆய்வு மனப்பான்மையும், இலக்கிய ஆர்வம் உடையவராகவும் இருப்பதால் புத்தக ஆணைக்குழுவை உருவாக்கி, புத்தகத் திருவிழாவை நடத்துவது மட்டுமல்லாமல் ஷார்ஜா மண்ணின் மைந்தர்களின் வீட்டுக்கு அரசு செலவிலேயே ஓர் நூலகத்தை வழங்கியிருக்கிறார் எனப் பாராட்டினார்.
ஷார்ஜா மக்கள் காட்டும் அன்பு, அன்னை மடியில் இருப்பது போன்ற உணர்வைத் தருவதுபோல் உள்ளதாக நெகிழ்ந்த ஸ்டாலின், உங்களின் தமிழ் உணர்வுக்குத் தலை வணங்குகிறேன்.
ஷார்ஜா சுல்தான் ஒரு வகையில் தமிழர்களுக்கு நெருக்கமானவர். திராவிட மொழிக் குடும்பத்தின் அங்கமாகிய மலையாள மொழியைப் பேச அவருக்குத் தெரியும். மலையாளம் தெரியும் என்னும்போது தமிழுக்கும் அவர் நெருக்கமாகிவிடுகிறார் என விளக்கமளித்தார்.
எந்த மொழியாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் தன் மொழி மற்றும் இனத்தின் உரிமைகளைப் பாதுகாக்க, பிறரது ஆதிக்கத்துக்கு ஆட்படாமல் சுயமரியாதையுடன் உயர்ந்து நிற்க முயற்சிப்போர் அனைவருமே திராவிட இயக்கத்துக்கு நெருக்கமானவர்கள்தான். அந்த வகையில் தன் மண்ணின் பெருமையை அறிவு தீபம் ஏற்றி வெளிச்சமிட்டுக் காட்டும் ஷார்ஜா சுல்தான் போற்றுதலுக்குரியவர்.
கடந்த தி.மு.க ஆட்சியின் போது வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனுக்காக 'வெளிநாடுவாழ் தமிழர்கள் வாரியம்' ஒன்றை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் உருவாக்கப்படும். அப்படி அமைக்கப்படும் வாரியத்தில் அமீரகத்திலும் உங்கள் சார்பில் ஒரு பிரதிநிதி இருப்பார் எனவும் உறுதியளித்தார்.