இடுக்கண் வருங்கால் நகுக.. சிரிப்போம்.. தெளிந்த மனதுடன் சிந்திப்போம்
சென்னை: "இடுக்கண் வருங்கால் நகுக" என்றார் வள்ளுவர். உலக சிரிப்பு தினத்தை கொண்டாடி முடித்துள்ள மக்களுக்கு இப்போது இது மிக மிக அவசியம்.
ஒரு மனித மனம் தன் நிலையில் இருந்தால் மட்டுமே சரியாக சிந்தித்து செயலாற்ற முடியும். துன்பத்தில் தவிக்கும் மனம், ஆபத்தில் பயம் கொண்ட மனம், கோபத்தில் நிலை தடுமாறும் மனம், அச்சம் கொண்ட மனம் - எதுவாயினும் ஒரு நிமிடம் அதை அமைதிப்படுத்தி ஒரு தெளிவை ஏற்படுத்திக்கொண்டால் மனம் அமைதி பெற்று தெளிவடையும்.
தெளிந்த நீரோடையே பயன்பாட்டுக்கு உதவும். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை தெளிவு கொண்ட ஒரு மனநிலை. அவ்வப்போது அதற்கு கொஞ்சம் சிரிப்பு என்னும் உணவை தந்தால் நாம் விரும்பும் வண்ணம் நமக்கு நன்மை தரும் விதமாக மூளையை ஊக்குவித்து துன்பத்தை களையும் வண்ணம் யோசனைகள் பெறலாம்.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று நம் முன்னோர்கள் எப்போதோ சொல்லி விட்டார்கள். இன்று அதன்பால் ஆராய்ச்சிகள் செய்து உறுதிப்படுத்தி இன்று உலகம் முழுதும் சிரிப்பு தினம் கொண்டாடி சிரிப்பதை அனுதினமும் நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். துன்பமோ இன்பமோ எதுவும் நிலை இல்லை. எதுவும் நம்மை கடந்து போகும்.
சிரிப்பதால் மனம் லேசாகும். இன்றைய சூழல் துன்பமானதுதான். இதை ஒரு யுத்த சூழலாக எதிர்கொள்வோம். முடிந்தவரை சிரித்திடுவோம்! சிரிக்க முடியும் வரையறையை முடிந்தவரை நீட்டிப்போம். சிரித்திடுவோம் மனம் விட்டு துயர்விட்டு!
சுற்றிலும் பாப்போம். ஏதாகிலும் சிரிக்கும்படி சிறு செயலாவது கண்களுக்கு கிடைத்திடும். ஒரு சிறு குழந்தையின் விளையாட்டோ குறும்போ சிறு விலங்கு பறவையின் செயலோ எதோ ஒன்றை மனம் ரசித்து சிரிப்பதில் கூட மனம் இலேசாகிடும். இன்றைய உலகில் நம் கைகளில் உலவும் கைபேசியில் காணும் கூட சிரிப்பு வீடியோக்கள் கூட சிரிப்பதற்கு சிறப்பே.
யார் மனமும் புண்ணாக்காமல் வலிக்க வைக்காமல் நாம் சிரிக்கும் சிரிப்பு நம் கவலையை மட்டுமல்லாமல் நம்மை சுற்றியிருப்போர் கவலையையும் போக்க நெஞ்சில் வஞ்சமில்லாமல் சிரிப்போம்! பின் தெளிந்த மனதுடன் சிந்திப்போம்!
- ஆகர்ஷிணி