உலகத் தாய்மொழி தினம்...பிரான்சில் இணைய வழியில் சிறப்புக் கொண்டாட்டம்
பாரீஸ் : பிரான்சு வொரெயால் தமிழ் கலாச்சார மன்றமும், பிரித்தானிய இந்தியத் தமிழ் வானொலியும் இணைந்து பிப்ரவரி 21 ம் தேதி உலகத் தாய்மொழி தினத்தை இணைய வழியில் கொண்டாட உள்ளன. இந்த சிறப்புக் கொண்டாட்டம் பிரான்சு நேரப்படி பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கும், பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 12 மணிக்கும் நடைபெற உள்ளன.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஜெர்மன் கொலோன் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் யுல்ரிக் நிக்லஸ் பங்கேற்க உள்ளார். தமிழகத்தை சேர்ந்த திமுக எம்.பி., திருச்சி சிவா விழாப்பேருரை ஆற்ற உள்ளார். இங்கிலாந்திலிருந்து செல்வி.நவீனா முத்துக்கிருஷ்ணனின் இறைவணக்கத்துடன் துவங்கும் இவ்விழாவிற்கு வொரெயால் தமிழ் கலாச்சார மன்ற தலைவர் இலங்கைவேந்தன் தலைமை வகிக்க உள்ளார்.
வரவேற்புரையை பிரித்தானிய இந்திய வானொலியின் நிறுவனர் டாக்டர் எழில் ஆனந்த்தும், தொடக்க உரையை தமிழ் கலாச்சார மன்ற செயலாளர் அலவ் கிருஷ்ணராஜ், வாழ்த்துரையை காரைக்கால் காரை பாரதி தமிழ்ச்சங்க தலைவர் வைஜெயந்திராஜன் வழங்க உள்ளனர்.
தமிழ் கலாச்சார மன்ற இணைச் செயலாளர் கெளதம் துரைராஜ் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்து நன்றி உரையாற்ற உள்ளார். லண்டனில் இருந்து பிரித்தானிய இந்திய தமிழ் வானொலியின் விஜயலட்சுமி இவ்விழாவை நெறியாள்கை செய்ய உள்ளார்.
இவ்விழாவில் பன்னாட்டு கருத்துக்களம் பகுதியில் இந்தியா, கனடா, இங்கிலாந்து, லண்டன், சீனா, மலேசியா, மியான்மர், துபாய், அயர்லாந்து, சுவீடன், பிரான்சு ஆகிய நாடுகளில் இருந்து தமிழ் துறை அறிஞர்கள் பலர் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாற்ற உள்ளனர். மொத்தம் 12 பேர், பல்வேறு துறைகளில் தமிழின் பங்கு குறித்து பேச உள்ளனர்.