உறக்கமே மருந்து! #WorldSleepDay
சென்னை: இன்று உலக தூக்க தினம். இதுகுறித்து ஒரு கவிதை.
பிறக்குமுன் பத்து மாத உறக்கம்
இறந்த பின் முடிவில்லா உறக்கம்
இடைப்பட்ட காலத்தில் உறக்கம் ஒவ்வொரு வகை
ஒவ்வொருவருக்கும் தனித்தனி வாழ்க்கை
வெவ்வேறு வகை பிரச்சினைகள்
குழந்தையாக இருக்கையில்
பிறக்குமிடம், வளருமிடம் என்று
சார்ந்தே இருக்கும் உறக்கமும்
அழுமுன்பே எல்லாம் கிடைக்கும் குழந்தையோ
நிம்மதியாய் சந்தோஷமாய் உறங்கிடுது
அழுதழுது ஓய்ந்தும் எதுவும் கிடைக்காத பிள்ளைகளோ
ஏங்கி ஏங்கியே தவிப்பினிலும் பசியிலும் உறங்கிடுது
வளர்ந்து விடலை பருவத்தில் தேர்வுகளாலே கலக்கம்
ஹார்மோன் சுரப்பிகளால் மயங்கியும் இல்லை உறக்கம்
அறிவு கொண்டு சிந்தனை செய்து மதியை சீர் செய்து
வாழ்க்கை சீர் செய்து ஒரு வழியாய்
சமநிலை அடையும் வரை பிள்ளைக்கும் பெற்றோர்க்கும்
விடைகொடுக்குது நிம்மதியான உறக்கம்
பலவகை பிணிகளுக்கு நல்ல உறக்கமே மருந்து
நிம்மதியான மனநலம் உறக்கமின்மைக்கு தீர்வு
எவ்வகை சூழலிலும் பதட்டமின்றி ஆராய்ந்து
மனத்திற்கு வேலை கொடாமல் அறிவுக்கு இடம்கொடுத்தால்
அமைதியான நல்லுறக்கம் கிடைத்திட வழிபிறக்கும்
வரவு செலவுகள் எந்தந்த வகையிலும்
எல்லா வகையிலும் மேலாண்மை செய்திட
நீண்டகால அளவுகோல் கொண்டு அதை நோக்கியே
குறுகிய கால திட்டங்கள் தீட்டியே
சிறப்பாய் அதையும் செய்துவிட்டால்
சரியான கால அளவில் தூக்கம் கொண்டே
மனம் உடல் இரண்டையுமே அமைதிப்படுத்திடலாம்!
- ஆகர்ஷிணி