வா.. வா... என் அழகிய சிட்டுக்குருவியே!
- ஆகர்ஷிணி
குருவியே! பழுப்பு நிற அழகு சிட்டுக்குருவியே!
சிறுவயதில் நான் பார்த்த குறுகுறு குட்டிக்குருவியே!
அரும்பரும்பு தானியங்களை அழகாய் கொத்தும் சிறு அலகு
நொடிக்கொரு தரம் திரும்பி கொத்திடும் அழகென்ன!.....
மரத்திலும் துணிக்கொடியிலும் அமர்ந்தே நீயும் எச்சமிடுவாய்!
அப்போதெல்லாம் துணியை அசுத்தம் செய்ததாலே
செல்லமாய் நானும் கோபித்தே சுத்தம் செய்திட்டேன்!
எத்தனை வருடங்களோ தெரியவில்லை, உன்னை பார்த்தே!....
இப்போது நானும் நினைக்கிறேன்! ... உன்னைக் கண்ட நாட்களில்
உன் அழகு சேட்டைகளை காணும் ஆவலில்
உன் பின்னே என் கவனமெல்லாம்...
"என்ன செய்யுறே? படிக்காமல்?" திட்டு வாங்கினேன் அம்மாவிடம்!
காலமெல்லாம் ஓடியே போய் விட்டது
நீ கண்ணிலிருந்து மறைந்தது கூட தெரியாமல்!
இன்று உன்னை தேடுகிறேன், ஒரு சேதி சொல்ல...
நீ காவிரி படுகையில் கொத்திய நெல்வயல்கள் இன்று பற்றியெரிகின்றது!
நீயும் பார்த்திருப்பாய்... உன்னை போலவே நாங்களும்
செய்வதறியாது தவிக்கின்றோம்! புலம்புகிறோம்!
நீயும் புலம் பெயர்ந்த அகதியாய் வேறு ஊருக்கு பறந்து போ!
உனக்கும் எமக்கும் சோறூட்டிய விவசாயிக்கு நீயும்
பாதுகாப்பான ஊரெதென்று கூட்டிப்போய் விடு!
இனிமேல் நீ இங்கு வந்தால் உலர்த்திய துணிமேல் எச்சமிட்டால்
செல்லமாய் கூட கோபிக்க மாட்டேன் நானும்!
என் தலை மேல் நீயமர்ந்து கொண்டாலும் கொஞ்சிடுவேன் நானே!
உன்னை கண்டாலே கொண்டாடிடுவேன் நானே...
வா.. வா... என் அழகிய சிட்டுக்குருவியே!