கம்போடியாவில் உலகத் தமிழர் மாநாடு 2018: தமிழர்களுக்கு அழைப்பு
கம்போனியாவில் உலகத் தமிழர் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கம்போடியா: உலக தமிழர் மாநாடு மே மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழ் பேரவைகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறுகையில்,
நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2049, வைகாசித் திங்கள் 5 மற்றும் 6, ஆங்கில ஆண்டு 2018, மே மாதம் 19 மற்றும் 20 ஆம் நாட்களில் கம்போடிய நாட்டில், உலகிலேயே மிகப் பெரிய வழிபாட்டுத்தலம் என்ற பெருமைக்குரிய அங்கோர்வாட் கோவிலுக்கு அருகில், "உலகத் தமிழர் மாநாடு" நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்குகொள்வதற்காக உலகெங்கிலுமிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்றுகூடுகிறார்கள். முதன்மையாக, தென்கிழக்காசிய நாடுகளான, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், லாவோஸ், புருனே மற்றும் பப்புவா நியூகினியா நாட்டில் வசிக்கும் தமிழர்கள் ஒன்று கூடி, மற்ற அனைத்து உலக நாடுகளிருந்து வருகை தரும் தமிழர்களுக்கு, தென்கிழக்காசியாவின் பெருமை, பழமை வாய்ந்த தமிழர் கோவில்கள், இன்றைய தென்கிழக்காசிய மக்கள் வாழ்க்கையோடு, பின்னிப் பிணைந்து கிடக்கும், பண்டைத் தமிழர்களின் கலை, கலாச்சாரம், இசை, நடனம், உணவு, உடை, விளையாட்டு, விவசாயம், கட்டடக்கலை, மற்றும் தமிழ் மொழியின் பரவல் போன்ற தமிழரின் பெருமைகளைப் பறைசாற்றும் மாநாடாக இது அமையும்.
பிற ஆசிய நாடுகளான, சீனா, ஜப்பான், கொரியா, தைவான், இலங்கை, மற்றும் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், லண்டன், ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், சவுதி, போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழர்கள் ஒன்று கூடுகிறார்கள்.
தென்புலத்தார் பன்னாட்டுத் தமிழர் கூட்டமைப்பின் நிறுவனர் திரு ஒரிசா பாலுவின் தொடக்க முயற்சியாலும், மற்ற தமிழ் அமைப்புகளான கம்போடியா தமிழர் பேரவை, Federation of International Tamil Association, தென்கிழக்காசியத் தமிழ்ச் சங்கம், கோட்டோ (Global organization of Tamil Origin) மற்றும் "Global organization for Tamil youth" போன்ற அமைப்புகளின் கூட்டு முயற்சியாலும் இந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டிலே கம்போடியாவின் சியாம் ரீப் தென் கிழக்காசியப் பல்கலைக்கழகத்தில், தமிழ் நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தோடு இணைந்து தமிழுக்கான இருக்கை அமைப்பதற்கான ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. ஆய்வுக் கட்டுரைகளை கொண்ட விழா மலர் வெளியிடவுள்ளோம். மேலும், உலகத் தமிழர் ஒன்றிணைந்த பன்னாட்டு வணிக மையம் தொடங்கப்பட உள்ளது.
தென்கிழக்கு மற்றும் கம்போடிய நாட்டின் பல அரசு தலைவர்களும், மற்றும் தமிழ் நாட்டிலிருந்து அமைச்சர்கள், துணைவேந்தர்கள், தொழிலதிபர்கள், தமிழ் ஆர்வலர்கள், திரைத்துறை பிரமுகர்கள், பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.
மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள்
- ஒரிசா பாலு, சென்னை
- சீனிவாச ராவ், சியாம் ரீப், கம்போடியா
- ஜானசேகரன், சியாம் ரீப், கம்போடியா
- திருத்தணிகாசலம், சென்னை
- விசாகன், இந்தோனேசியா
- ராமசாமி, கம்போடியா தமிழ்ப் பேரவை
- செல்வக்குமார், கோலாலம்பூர்
- குணவதி மைந்தன், புதுவை
தங்கள் நல்வரவை அன்புடன் எதிர்ப்பார்க்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.