சிகாகோவில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு-தமிழ்ச் சங்கங்களிடம் கருத்து கேட்பு
அமெரிக்காவின் சிகாகோவில் வரும் 2019 ஜூலை 3,4 தேதிகளில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுநடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோவில் வரும் 2019 ஜூலை 3,4 தேதிகளில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுநடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனிநாயக அடிகளார் 1966 -ஆம் ஆண்டு முதன் முதலாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார். அதன்பின் 1968 -ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா வெகு சிறப்பாக சென்னையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தினார். அதன்பின் தொடர்ந்து பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை ,கோலாலம்பூர், மொரிசியசு, தஞ்சை ஆகிய நகரங்களில் நடத்தப்பெற்றது.
மேலும் சிறப்புற்ற அம்மாநாடு, அடுத்து திருவள்ளுவர் ஆண்டு 2050, ஆனித் திங்களில் (2019 ஜுலை) அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற உள்ளது. உலகத் தமிழ் ஆய்வு மன்றம், வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கம் இணைந்து இந்த மாநாட்டை சிறப்புற நடத்திட முடிவெடுத்துள்ளது.
உலகெங்கிலும் தமிழ்ப்பணி ஆற்றிவரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து, தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் கூடிய நோக்கோடு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, திருவள்ளுவர் ஆண்டு 2050 ஆனித் திங்களில் 19, 20 ஆம் நாட்களில் (3,4, ஜுலை 2019) சிகாகோ மாநகரில் சிறப்புற நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து தமிழ்ச்சங்கப் பேரவை விழா, மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 50 -ஆவது ஆண்டு நிறைவு விழாவும் பெரும் மகிழ்வுடன் நடைபெற உள்ளன.
தமிழை முதன்மைப்படுத்தி, அரசியல் கலப்பின்றிநடைபெறவிருக்கும் இம்மாநாட்டிற்குத் தமிழியல் ஆய்வில் இன்றையளவில் பெரும் பங்கு வகிக்கும் பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இவ்விழா அமெரிக்கவாழ்த் தமிழர்கள், உலகத் தமிழர்கள், உலகத் தமிழ் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கும் வெற்றி விழாவாக அமைய உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும் எதிர்நோக்கி உள்ளனர்.
அனைத்து தமிழ்ச் சங்கங்கள் அவர்களின் கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். அவர்களின் பங்களிப்பும் தமிழ்த் தனித்திறனும் அவசியம் தேவை என்று 2019 உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.