சர்க்கரை நோயை தடுப்பது எப்படி?: மஸ்கட்டில் நடந்த சிறப்பு விழிப்புணர்வு முகாம்
மஸ்கட்: மஸ்கட் இந்திய தூதரகத்தில் யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நீரிழிவை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விவரிக்கப்பட்டது.
இந்திய அரசு இந்திய மருத்துவ மற்றும் உடல்நல முறைகளான யோகா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மருத்துவ முறைகள் குறித்து ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அங்குள்ள இந்திய தூதரக அலுவலகங்கள் மூலம் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
ஓமன் நாட்டில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் மஸ்கட் இந்திய தூதரகத்தில் யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நீரிழிவை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விவரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் இந்திரமணி பாண்டே தலைமை வகித்தார்.
அவர் தனது உரையில், உலக அளவில் இரண்டாவது ஆண்டாக சர்வதேச யோகா தினம் வரும் ஜுன் 21-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதம் குறித்து விளக்கும் வகையிலும் மஸ்கட்டில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத கிளினிக் என்ற மருத்துவ நிலையத்துடன் இணைந்து மஸ்கட் இந்திய தூதரகம் இந்த நிகழ்ச்சியினை நடத்துகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் யோகா மற்றும் ஆயுர்வேத முறைப்படி நீரிழிவு நோயை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விவரிக்கப்பட்டது. இதனை டாக்டர் அபிசேக் குமார் விவரித்தார். அவர் தனது உரையில், உணவு கட்டுப்பாடு, வாழ்க்கைமுறை, மூச்சுப்பயிற்சிகள், யோகா, பழங்கால மூலிகைகள் மற்றும் தெரப்பி சிகிச்சைகள் உள்ளிட்டவை மூலம் நீரிழிவினை கட்டுப்படுத்த முடியும். இது மட்டுமல்லாமல் நீரிழிவினை கட்டுப்படுத்த உதவும் பல்வேறு யோகா முறைகள் குறித்து விவரித்தார்.
சுபஸ்ரீ சதபதி என்ற யோகா ஆசிரியை யோகா முறைகளை செய்து காண்பித்தார். இந்த முறைகள் நீரிழிவினை எந்த வகையில் கட்டுப்படுத்த உதவுகிறது என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஓமன், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்கள் இந்த மருத்துவ முறைகள் குறித்த தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. பொதுமக்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தி இந்திய தூதரகத்தின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. இந்திய மருத்துவ முறைகளின் சிறப்புக்களை இதன் மூலம் அறிய முடிந்தது என்றனர்.