தமிழ் கலாச்சார வளர்ச்சியில் இளைஞர்கள் அதிகம் பங்கெடுக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்
நம் இளைஞர்கள் வெளிநாட்டு மோகத்தில் பிற மொழிகளை எல்லாம் கற்றுக் கொண்டாலும் கூட , தமிழை பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்களைப் போல தமிழகத்தில் வாழ்கின்ற தமிழ் இளைஞர்கள் தமிழ் வளர்ச்சியில் தமிழ் கலாச்சார வளர்ச்சியில் அதிக பங்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார். நம் இளைஞர்கள் வெளிநாட்டு மோகத்தில் பிற மொழிகளை எல்லாம் கற்றுக் கொண்டாலும் கூட , தமிழை பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும், நம் இளைஞர்களுக்கும், வருங்கால சந்ததியினருக்கும், ஆழமாக சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
உலகத் தமிழ் வம்சாவழி அமைப்பு நடத்திய ஏழாம் ஆண்டு தமிழர் திருநாள் விழா மிக சிறப்பாக நடைபெற்றது ஜனவரி 11ஆம் தேதியன்று சென்னை அம்பாசிடர் பல்லவாவில் தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. உலகத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசு விருந்தினர்களாக அழைத்தார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.
இரண்டாவது நாள் நிறைவு நிகழ்ச்சியாக 12-1 -2020 அன்று மாலை 6.00 மணிக்கு இணையவழி மூலம் உலக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, "தமிழ் வளர்ச்சியில் உலக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கு" என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தெலுங்கானா மாநில ஆளுநர் மேதகு மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரை வழங்கினார்.
இலங்கை வடக்கு மாகாணம் முன்னாள் முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களும், இலங்கை முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அவர்களும், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பையா முத்துசாமி அவர்களும்,பப்புவா நியூ கினியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரன் முத்துவேல் அவர்களும், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். முன்னதாக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார், இவ்வமைப்பின் ஊடகப்பிரிவு சார்ந்த ஜான் தன்ராஜ் அவர்கள் நெறியாள்கை செய்தார்.
வரவேற்புரை ஆற்றிய செல்வகுமார் அவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக 54 நாடுகளில் இருந்து தமிழ் ஆளுமைகளை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து மாபெரும் தமிழர் திருநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழர் பண்பாட்டு கலாச்சார உடை, உணவு, அனைத்தையும் பிரதிபலிக்கும் விதமாக சிறப்புற நடைபெற்று வந்ததை நாம் அறிவோம்.
இந்த ஆண்டு கொரானா பரவலின் காரணமாக சென்னையில் அம்பாசிடர் பல்லவா வில் எளிய முறையில் தமிழர் பண்பாட்டு கலாச்சார உணவு உடை பிரதிபலிக்கின்ற நிகழ்ச்சிகளை திரைப்பட நடிகர்கள் தமிழ் ஆளுமைகளை வைத்து நடத்தினோம். இரண்டாவது நாள் நிறைவு நிகழ்ச்சியாக இன்று தமிழ் மொழி மற்றும் கலாச்சார வளர்ச்சியில் உலக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கு என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் சிறப்போடு நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில் தலைமையேற்று சிறப்புரை வழங்க இருக்கிற தெலுங்கானா மாநில ஆளுநர் மேதகு மருத்துவர் தமிழிசை உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களை வரவேற்று உரையாற்றினார்.
சசிதரன் முத்துவேல் அவர்கள் பேசுகின்ற பொழுது. உலகமெல்லாம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரந்து வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழர்களின் மூலமாக தமிழ் சிறப்பாக வளர்ந்து வருகிறது. வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் தான், தமிழகத்தில் வாழ்கிற தமிழர்களை காட்டிலும் தமிழ் வளர்ச்சியில் அதிக முக்கியத்துவத்தோடு தமிழர் கலாச்சாரத்தை, உலக நாடுகளில் கொண்டு சேர்க்கிற வேலைகளை செய்து வருகிறார்கள்.
குறிப்பாக மலேசியா சிங்கப்பூர் மொரீசியஸ் உள்ளிட்ட தமிழர் வாழும் நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழர் கொண்டாடும் தைப்பூச விழாவிற்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது இப்பொழுதுதான் தமிழகத்தில் வழங்கி இருக்கிறார்கள் இது சிறப்புக்குரியது.
அதேபோல உலக நாடுகளில் வாழ்கிற தமிழர்களை கலாச்சார ரீதியாகவும் , தொழில் ரீதியாகவும், ஒன்றிணைக்கிற வேலையை கடந்த ஏழு ஆண்டுகளாக மிகச் சிறப்பாக செய்து வருகிற, உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, உலக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேலும் தமிழ் வளர்ச்சிக்கு நாம் எல்லாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கருப்பையா முத்துசாமி அவர்கள் பேசுகிற பொழுது மலேசிய நாட்டில் தமிழுக்கு எப்பொழுதும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தமிழ் கலாச்சாரத்தை தமிழர்கள் எப்போதும் மறக்காமல் பின்பற்றி வருகின்றனர். நாம் தமிழ் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறோம் அதேபோல தமிழர்களுடைய பொருளாதாரத்திற்கும் நாம் முக்கியத்துவம் தரவேண்டும். இந்த நிகழ்ச்சியை நடத்துகிற அமைப்பிற்கு என் வாழ்த்துக்கள் உலகம் முழுவதும் இருக்கிற அனைத்து தமிழர்களுக்கும் தமிழ் வளர்ச்சியிலும் தமிழர் பொருளாதார வளர்ச்சியிலும் ஒன்றிணைய வேண்டும் என்று உரை நிகழ்த்தினார்.
ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசுகிற பொழுது உலகத் தமிழர்களை போன்று இலங்கை தமிழர்களும் தமிழ் கலாச்சார மொழி வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டவர்களாக, தமிழ் பாரம்பரிய பண்டிகைகளை தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். இலங்கை பாராளுமன்றத்தில் பொங்கல்விழா, நவராத்திரி விழாக்கள், சிவராத்திரி விழாக்கள், போன்றவற்றை தேசிய விழாக்கள் ஆக நாங்கள் கொண்டாடி வருகிறோம்.
தமிழர்கள் மிகவும் எழுச்சியாக தமிழர் கலாச்சார விழாக்களை நடத்தி வருகிறார்கள் . இலங்கை தமிழர்களின் அரசியல் அதிகார பகிர்வுக்கு இந்தியா மிக முக்கிய பங்காற்றி வருகிறது, இந்தியாவின் கண்ணாக இலங்கைத் இருக்கிறதை நான் பெருமை கொள்கிறேன். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் உரையாற்றினார்.
விக்னேஸ்வரன் பேசும் பொழுது, கடந்த ஆறு ஆண்டுகளாக உலகத் தமிழர் திருநாள் விழா நடத்திவரும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமாருக்கு என் வாழ்த்துக்கள். மேலும் கடந்த ஆண்டு பல நாட்டு தமிழர்கள் தமிழ் சொந்தங்கள் கலந்துகொண்ட நிகழ்வில் நானும் கலந்து கொண்டு எங்களுடைய தமிழ் மொழி கலாச்சாரத்தை பற்றி பேச வாய்ப்பு அமைந்தது. மேலும் இன்றைய சிறப்பு விருந்தினர் மரியாதைக்குரிய மருத்துவர் தமிழிசை சௌந்தர்ராஜன், மாண்புமிகு தெலுங்கானா ஆளுநர் அவர்களை அவருடைய இல்லத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழின்பால் அன்புகொண்ட சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்.
கொரோனாவால் நம் தமிழ் உறவுகளை இணையத்தில் தான் சந்திக்க தற்போது அறிவியல் நமக்கு அளித்த வாய்ப்பு. தமிழ் மொழி கலை, கலாச்சாரம், பாரம்பரியம் உணவு உடை போன்றவைகளை நம் சந்ததியினர் அறியும் வகையில் ஆண்டுதோறும் நம் தமிழ் மக்கள் ஒன்று கூடுவும். விவாதிக்கவும் ஏற்படுத்தப்பட்ட இவ்வமைப்பு தொடர்ந்து பணியாற்றி நம் சமுதாய மக்கள் உயர்வுக்கு வழிவகுக்க உலகிலுள்ள அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுக்க வேண்டும் என வேண்டுகிறேன். ஏழாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழாவில் நேரடியாக வந்து கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் இணையத்தில் யாவது கலந்து கொள்ள வாய்ப்பு அமைந்ததால் வாய்ப்பு அமைந்தது இறைவனுக்கு நன்றி கூறுகிறேன் வணக்கம்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை அவர்கள் பேசும் போது நாம் பல்வேறு நாடுகளில் மிக தூரமாக இருந்தாலும், நம் அனைவருக்கும் மிக அருகில் தமிழ் இருக்கிறது என்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். இன்று பல்வேறு பணிகளுக்கு இடையில் இந்த நிகழ்ச்சியில் தமிழுக்கு என் பங்கு இருந்தே ஆக வேண்டும் என்ற அடிப்படையில், உலகமெல்லாம் தமிழ் ஒலிக்கிற இந்த நேரத்தில் தமிழிசையின் பங்கு முக்கியமாக இருக்கும் என்ற அடிப்படையில், இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்கிறேன்.
இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து இருக்கிற செல்வகுமார் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். அதேபோல இந்நிகழ்வில் கலந்து கொண்டு இருக்கிறார் தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்வேறு நாடுகளில் இருக்கிற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தமிழர் பண்டிகையான பொங்கல், தைப்பூசம் போன்ற விழாக்களுக்கு அரசு விடுமுறை மட்டுமல்லாமல் பாராளுமன்றத்திலே கொண்டாடுவதற்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுத் தந்திருக்கிறதை நினைத்து நான் அவர்களுக்கு எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே பேசிய நண்பர்கள் சொன்னதைப்போல தமிழர்கள் தமிழ் வளர்ச்சியில் மட்டுமல்லாமல் பொருளாதார வளர்ச்சியிலும் மேம்பட வேண்டும். பொருளாதாரமே வாழ்வாதாரத்தை சிறப்பிக்கும், பணம் பாதாளம் வரைக்கும் பாயும், என்பது நமது பழமொழி எனவே உலக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான முன்னெடுப்புகளை ஏற்பாடு செய்வதில் என் பங்களிப்பும் இருக்கும் என்றார்.
எனது வேண்டுகோள் என்னவென்றால் வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்களைப் போல தமிழகத்தில் வாழ்கின்ற தமிழ் இளைஞர்கள் தமிழ் வளர்ச்சியில் தமிழ் கலாச்சார வளர்ச்சியில் அதிக பங்கு எடுத்துக் கொள்ள வேண்டும். நம் இளைஞர்கள் வெளிநாட்டு மோகத்தில் பிற மொழிகளை எல்லாம் கற்றுக் கொண்டாலும் கூட , தமிழை பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும், நம் இளைஞர்களுக்கும், வருங்கால சந்ததியினருக்கும், ஆழமாக சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள். ஏனென்றால் நான் தமிழை என் பெயரில் மட்டுமல்ல என் உயிரிலும் வைத்திருக்கிறேன். அதனால் நான் பிறமொழிகளில் கற்றுக் கொண்டாலும் தமிழையே உயிராக கருதுகிறேன்.
இன்றைய இளைஞர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் தமிழ் நல்ல புத்தகங்களை தேடித்தேடி படித்து, பாதுகாக்க வேண்டும் , குறிப்பாக ஆத்திச்சூடி , திருக்குறளில் சொல்லாத விஷயங்கள் அல்ல அவ்வளவு நன்னெறிகள் சொல்லப்பட்டு இருக்கின்றன, அவற்றை எல்லாம் நமது இளைஞர்கள் பயின்று பாதுகாக்கப்படவேண்டும்.
இளைஞர்கள் நாள் விவேகானந்தர் அவர்களின் பிறந்த நாள், விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றுவதற்கு தமிழ்நாடு பெரும் பங்களிப்பு அளித்திருக்கிறது. உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் அனைவரும் தமிழ் வாசிப்பில் ஒருங்கிணைய வேண்டும் . சில நடிகை நடிகைகள் பேசுவதுதான் தமிழ் என்று நாம் இருக்கிறார்கள். நல்ல தமிழை உலகம் முழுவதும் பறைசாற்றுவதர்க்கு, நம் இளைஞர்கள் நல்ல நூல்களை படித்து நல்ல தமிழை பேச வேண்டும். தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றினால் கொரானா வரவே வராது. ஏனென்றால் தமிழர் கலாச்சார உணவில் மிளகு , சீரகம், பூண்டு, புளி, இஞ்சி போன்றவற்றை தினம்தோறும் சேர்த்துக் கொள்கிற பழக்கம் உண்டு. அதே போல உலகம் முழுவதும் கை கொடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தாலும், நாம் வணக்கம் என்று சொல்லி கையெடுத்து கும்பிடுகிற வழக்கத்தை தான் பெற்றிருந்தோம்.
பெரியவர்கள் வெளியில் சென்று வீட்டுக்குள் வந்தால் கை, கால்களை கழுவிவிட்டு தான் வரவேண்டும். அதேபோல கிராம கோயில் விழாக்களில் காப்பு கட்டி விட்டால், வெளியிலிருந்து யாரும் வரவும்க்கூடாது, கிராமத்தில் இருந்து யாரும் வெளியே செல்லவும் கூடாது என்ற வழக்கங்கள் எல்லாம் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. இதுதான் கொரோனா காலங்களில் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. எனவே இன்றைக்கு பின்பற்றப்படுகின்ற உணவாக இருந்தாலும், பழக்க வழக்கமாக இருந்தாலும் , அது தமிழ் கலாச்சார உணவு பழக்க வழக்கமே உலகம் முழுவதும் சிறப்பாக கருதப்படுகிறது பின்பற்றப்படுகிறது.
அதேபோல ஆன்மீக தமிழ் என்னாலும் ,என்றும் பதினாறாய் வாழ கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்த சமயத்தில் உலகம் முழுவதும் இருக்கிற தமிழர்களை இணையவழியில் சந்திப்பதற்கு வாய்ப்பளித்த உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் செல்வகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, இந்த நல்ல தருணத்தில் உலக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அரசு விருந்தினர்களாக தெலுங்கானாவில் நான் இருக்கிற உங்கள் தமிழச்சி இருக்கிற விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டும் என்று நான் அன்போடு அழைத்து இந்த நல்ல வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன் என்று உரையாற்றினார்.
நிறைவாக ஊடகப்பிரிவு ஜான் தன்ராஜ் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார். இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் 40 இணையவழி தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது என்று உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் அவர்கள் தெரிவித்தார்.