சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய பெண்மணி
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஷரிபா. இவரது கணவர் பெயர் இப்ராகீ்ம் குட்டி. இத்தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை. 3 பேரும் முதுகலைப் பட்டதாரிகள். 2 மகன்கள் அரபு நாட்டிலும், மகள் தாயுடனும் உள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் பிழைப்புக்காக தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு பகுதிக்கு குடிபெயர்ந்த இத்தம்பதியினர் ஆரியங்காவு ஐயப்பன் கோவில் அருகில் ஒரு சிறிய கடையை வைத்து தங்கள் வாழ்க்கையை தொடங்கினர்.
ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம்
கடந்த சில ஆண்டு காலமாகவே இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஷரிபாவுக்கு ஒரு ஆசை. ஆம் சபரிமலை போகும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்பதுதான். தீவிரமாக முடிவெடுத்து மகன்களிடமும், உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவித்தார். கடந்த கார்த்திகை 1ம் தேதி முதல் தினமும் 400 முதல் 600 ஐயப்ப பக்தர்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள், வியாபாரிகள் உள்ளிடோருக்கு உளுந்தம் கஞ்சி சுடசுட வழங்குகிறார்.
மனித நேய செயல்
காலை 8 மணி முதல் இரவு வரை தனி ஆளாக நின்று சமையல் செய்து வரும் இவர் ஜனவரி மாதம் சபரி்மலையில் நடைபெறும் மண்டல பூஜை தினம் வரை அன்னதானம் வழங்க உள்ளதாக கூறுகிறார். தினமும் 60 கிலோ அரிசி, 30 கிலோ சிறுபயிறு, 5 கிலோ வெந்தயம், 1 கிலோ பூண்டு, 8 பாக்கெட் ஊறுகாய் என மொத்தம் தினமும் ரூ.4,000 செலவு செய்து வருகிறார். இஸ்லாமியராகப் பிறந்தாலும் ஐயப்பன் அருளால் தன் குடும்பம் அனைத்து வளமும் பெற்றுள்ளதாக கூறும் ஷரிபாவுக்கு வயது 60ஐ தாண்டிவிட்டது. மதங்களை கடந்து மனிதநேயமும், இறைவன் ஒருவனே என்ற கொள்கையும் உள்ளவர்கள் இருக்கும் வரை இவ்வுலகம் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.