திருவோண பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா விழா: அமைச்சர் பச்சைமால் துவக்கி வைக்கிறார்
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில் திருவோண பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் சுற்றுலா விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா இன்று (10-ம் தேதி) துவங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது.
முதல் நாளான இன்று மாலை 4 மணிக்கு திற்பரப்பு வாகனம் நிறுத்தும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விழா பந்தலில் துவக்க விழா நடக்கிறது. மாவட்ட கலெக்டர் மதுமதி விழாவுக்கு தலைமை வகிக்கிறார். சுற்றுலா அலுவலர் முரளிதேவி வரவேற்கிறார். வனத்துறை அமைச்சர் பச்சைமால் குத்து விளக்கேற்றி, கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து பேசுகிறார்.
தொடர்ந்து சேராத்து குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக மாலை 3.30 மணிக்கு ஜங்ஷனில் இருந்து சிங்காரி மேளத்துடன் துவங்கும் சுற்றுலா விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மதுமதி துவக்கி வைக்கிறார். பேரணி திற்பரப்பு அருவியில் நிறைவடைகிறது.
இரண்டாம் நாள் காலை 10 மணிக்கு அத்தப்பூ போட்டி, பெண்களுக்கான சமையல் போட்டி, மாலை 6 மணிக்கு முரசு கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடக்கிறது. மூன்றாம் நாள் காலை 10 மணிக்கு கபடிப்போட்டி, கைப்பந்து போட்டி, படகில் சென்று வாத்து பிடிக்கும் போட்டி நடக்கிறது.
கலெக்டர் மதுமதி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கி, பேசுகிறார். அலுவலர் ராமசாமி பிள்ளை நன்றி கூறுகிறார். கிருஷ்ணா மெல்லிசை குழுவின் இன்னிசை நடக்கிறது.