17. அழுக்காறாமை
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
(161)
விளக்கம்:
தன் நெஞ்சில் பொறாமை எண்ணம் இல்லாத தன்மையினையே ஒருவன், தனக்கு உரிய வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்.
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
(162)
விளக்கம்:
ஒருவன் எவரிடத்திலும் எப்போதும் பொறாமை இல்லாமல் இருக்கின்ற தன்மையைப் பெறுவானாயின், மேலான பேறுகளில் அதற்கு இணையாகச் சிறந்ததது எதுவும் இல்லை.
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
(163)
விளக்கம்:
பிறனுடைய ஆக்கத்தைக் கண்டதும், அதனைப் பாராட்டாமல் பொறாமைப்படுகிறவன், தனக்கு அறனும் ஆக்கமும் சேர்வதை விரும்பாதவனே ஆவான்.
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
(164)
விளக்கம்:
'பொறாமை' என்னும் தவறான எண்ணத்தால் துன்பமே உண்டாவதை அறிந்து, அறிவாளர், பொறாமையால் தீவினைகளைச் செய்யமாட்டார்கள்.
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.
(165)
விளக்கம்:
பொறாமை உடையவரைக் கெடுப்பதற்கு எந்தப் பகையும் வேண்டாம் ;அதுவே போதும் ; பகைவர் கேடு, செய்யத் தவறினாலும், அது தவறாமல் கேட்டைத் தந்துவிடும்.
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
(166)
விளக்கம்:
இன்னொருவன் பிறனுக்குக் கொடுப்பதைப் பார்த்தும் பொறாமைப்படுகிறவனின் குடும்பம், உடுக்க உடையும், உண்ண உணவும் இல்லாமல் கெடும்.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
(167)
விளக்கம்:
பொறாமை உடையவனைக் கண்டு திருமகள் வெறுத்து, அவனைத் தன் தமக்கையான மூதேவிக்குக் காட்டி, தான் அவனை விட்டு நீங்கிப் போய்விடுவாள்.
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
(168)
விளக்கம்:
பொறாமை என்னும் ஒப்பற்ற கொடிய 'பாவி', ஒருவனது செல்வத்தையும் கெடுத்து, அவனைத் தீய வழியிலும் செல்லும்படி செலுத்தி விடும்.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
(169)
விளக்கம்:
பொறாமை கொண்ட நெஞ்சத்தானின் ஆக்கமும், பொறாமையற்ற சிறந்தவனுடைய கேடும், மக்களால் எப்போதும நினைக்கப்படும்.
அழுக்காறு அகன்றாரும் இல்லை அஃதில்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.
(170)
விளக்கம்:
உலகில் பொறாமையினால் மேன்மை அடைந்தாரும் இல்லை ; பொறாமை இல்லாததால் பொருள் பெருக்கத்தில் குறைந்த வறுமையானவரும் இல்லை.