மோனோ ரயில் திட்டத்துக்கு டெண்டர் கோரும் பணி தீவிரம்: ஆளுநர் ரோசைய்யா
சென்னை: மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டர்கள் கோரும் பணி விரைவாக நடைபெற்று வருவதாக தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவையில் உரை நிகழ்த்திய ஆளுநர் ரோசைய்யா கூறியதாவது,
"சென்னையில் ஒருங்கிணைந்த பன்முறை நகர்ப் போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தும் நோக்கத்தில் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அரசின் சேவைகளை, மக்களை மையப்படுத்தி சிறப்பாகச் செயல்படுத்திட, தனியார் பங்களிப்புடன் மாவட்டப் புதுமை நிதியையும் இணைத்து அனைத்து மாவட்டங்களிலும் பயன்படுத்தப்படும்.
3,000 பேருந்துகள்
"2011-2012ம் ஆண்டில் ரூ. 539.83 கோடி செலவில் 3,000 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நல்ல நிலையில் உள்ள 1,432 பழைய பேருந்துகளின் மறுகட்டுமானத்திற்கு ரூ. 97.58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கருவறை முதல் கல்லறை வரை பாதுகாப்பு
தமிழக அரசின் உழவர் பாதுகாப்பு திட்டமானது விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கருவறை முதல் கல்லறை வரையிலான விரிவான சமூகப் பாதுகாப்பை வழங்குகிறது. இதேபோல் அரசால் கொண்டு வரப்பட்ட விரைவுவழி பட்டா மாறுதல் திட்டம் நல்ல பயனை அளித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 50 விழுக்காடு பட்டா மாறுதல்கள் நடந்துள்ளது என்றார்.