கார்த்திகை தீபம்.. திருப்பரங்குன்றத்தில் கொடியேற்றம்..டிச.5ல் பட்டாபிஷேகம், 6ல் தேரோட்டம்
திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீப திருவிழா திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முருகப்பெருமான் பட்டாபிஷேகம் டிசம்பர் 5ஆம தேதியும் 6ஆம் தேதி காலையில் தேரோட்டமும் மாலையில் மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட உள்ளது. தீப திருவிழாவில் சிவ ஆலயங்களிலும் முருகன் ஆலயங்களிலும் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் என்று பார்க்கலாம்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும். கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.
உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.
கார்த்திகை தீபம்..மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வர வேண்டுமா? இதை மறக்காமல் செய்யுங்கள்
தீபத்திருவிழா கொடியேற்றம்
சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை முன்னிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் சந்தனம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு தர்ப்பை புல், மாவிலை, பூ மாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மதியம் 12.20 மணிக்கு கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. விழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி- தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
சுப்ரமணியசுவாமி பட்டாபிஷேகம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5ஆம் தேதி இரவு 8 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு வைர கிரீடம், நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6ஆம் தேதி மதியம் 11 மணிக்கு கார்த்திகை தேரோட்டம் நடைபெறும்.
மலை மீது மகாதீபம்
டிசம்பர் 6ஆம் தேதியன்று மாலை 6 மணிக்கு மலைமேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது. திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக மலைமீது மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 300 லிட்டர் நெய், 100 மீட்டர் காடாதுணியால் ஆன திரியில், 5 கிலோ கற்பூரத்தில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த கொப்பரை சுத்தம் செய்யப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் வைக்கப்பட்டது.
சொக்கப்பனை
மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்ட பிறகு பிறகு இரவு 8 மணி அளவில் 16 கால் மண்டபம் அருகில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவ பெருமானை ஜோதிசொரூபமாக காணவே சிவன், முருகன் கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துகின்றனர். சிவனுக்கு சொக்கன் என்ற பெயரும் உள்ளதால் சொக்கப்பனை என்ற சொல் ஏற்பட்டது.
தேவ மரம் பனை
கற்பக தருவான பனை பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு. பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது.
சிவனாக காட்சி தரும் சொக்கப்பனை
பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது. பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
அமோக விளைச்சல் கிடைக்கும்
விஷ்ணு ஆலயங்களிலும் சொக்கப்பனை விழா நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் ரங்காநாதர் கோவிலில் இன்று இரவு சொக்கப்பனை ஏற்றப்படும். கோவில்களில் சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை காப்பாக நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம். சாம்பலை எடுத்துச் சென்று வயல்வெளிகளில் தூவினால், அந்த முறை அமோக விளைச்சல் நிச்சயம் என்பது நம்பிக்கை. கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் திருவண்ணாமலையில் சிவமாக காட்சி தரும் மலை மீது மகா தீபம் ஏற்றப்படுவதால் சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.