கள்ளுக்கும் கள்
-ஆனந்த்
கண்ணே கண்மணியே என்றுனைப்
புகழப் போவதில்லை - நின்
கண்கள் என்னைக் காயப்படுத்தியதால்!
என் வாழ்வுதனை
இருட்டாக்கிடவா நின்
விரிந்த கூந்தலுக்குள் இரவினை
மறைத்து வைத்தாய்?
வெண்மேகங்களைக் கண்ணுக்குள்
பரவவிட்டு
விண்மீன்களைக் கருவிழிகளாய்
அணிந்தவளே!
என்னை மட்டும் காலணியாய்
அணிந்ததன் காரணம்
நினைத்ததும் தூக்கி எறியத்தானா?
தடாகக் கமலமதைத் தாங்கிடத்
திறனின்றித் தள்ளாடித் தாலாட்டும்
தண்டு போல
வாடாமலர் நின் முகமதைச்
செங்கழுத்து எப்படித் தாங்கிடுமென்றுத்
தவித்திருந்தேன் - இன்றோ
இப்புவி கூட எனைத்
தாங்கிடத் தயங்குகிறதே!
நீ நடக்கையில்
பறந்திடும் தூசியதை உயிர் வாயுவாய்
சுவாசித்திருந்தேன் - இன்றென்
சுவாசமோ
நேரம் பார்த்து நின்றிடக் காத்துக் கிடக்கிறது,
நல்ல காற்றிருந்தும்!
பேதைப்பெண் என்றுரைத்து ஆண்
மேதையையும் பேதையாக்கும்
கன்னிப் பெண்ணவள்
கள்ளுக்கும் கள்!
-ஆனந்த்([email protected])