காற்றில்லா உலகில் சுவாசித்த கவி-'பாரதி'
- அனுக்ரஹா
புதுமையென
இலக்கணங்களைத்
தகர்க்கவில்லை - புது
இலக்குகள் உருவாக்கினார்:
பழமையின் சவத்தின் மேல்
ஜீவிக்கவில்லை:
அவர் புதுமை,
உணர்வுகளின் வேட்கையிலே
உயிர்த்தது.
வரலாற்று பெருமிதத்தால்
வற்றிடவில்லை - அவர்
கவிதைக்கு மெய்யேனும்
புது அழகு சேர்த்தார்
சிந்தனைக் குதிரைகளுக்கு
மரபுக் கடிவாளங்கள் வேண்டாம்
நெஞ்சிலுரமும் நேர்மைத்திறமும்
போதுமென்றார்.
அடிமைச் சங்கிலியை
உடைத்தெறிக்க
அரசனாக வாளெடுத்தார் -
சமூகம் அளித்த
வறுமை அரியணையினின்று:
நாம் கனவுகள் காண்போம்
விடியலுக்குள் மறைந்துவிடும்
அவர் கனவுகள் கண்டார்
இருண்ட இரவு விடியல் கண்டது
சொற்களில் விதைத்தார்
தன் அக்னி குஞ்சை
உணர்ச்சித் தழல்களால்
வெந்து தணிந்தது பழமை
சிறகு விரித்துப் பறந்தார்
சுதந்திர வானில்
சிறகு உணராத பறவைகள்
புருவம் சுளித்த போது
ஞான ரதங்கள் படைத்தார்
மனக் குதிரையினால்
புது உலகங்கள் சென்றார்
தன் காலத்தையும் தாண்டி:
காற்றோடு உறவாடும்
கானகத்துள் பல
பறவைகளின் இசையினை
மொழிபெயர்த்தார்
பிறமொழிக் காப்பியங்கள்
தமிழில் பேச
கூடுவிட்டுக் கூடு பாயும்
வித்தையறிந்திருந்தார்
மதியை மயக்கும்
சுழலும் உலகையே
தன் கவி அம்புகளால்
மயங்கச் செய்தார்.
புதுமையிலும் புதுமை
காற்றில்லா உலகில்
சுவாசித்த கவி.
- அனுக்ரஹா ([email protected])