விழுந்தேன்!
-ஆயிரம் ராஜா
இலவச வண்ணங்களில்
நிறமிழந்து நின்றது
தேசம்!
வன்முறை வெளிச்சத்தில்
மனிதம் மறந்தது
உலகம்!
சிவப்பு சிந்தனையில் கூட
இரத்த துளிகள்....!
வங்கத்தில் நிறக்குருடா..?
இனி எழும்
திசையின் குழப்பத்தில்
கதிரவன்..
விழித்தேன்..!!
இன்னமும் கொப்பளித்தது
இட ஒதுக்கீட்டுக் கோபம்..!
பாலைவனக் கவலைகளில்
அவசரப்பட்டு
மூச்சு வாங்கிய
முடி மன்னர்கள்..!!
தலையை தடவிக் கொண்டேன்…
இலக்கண பிழையில்
எட்டாமல் போன
முதற்காதல்..!
நிமிர்ந்தேன்..
உயிரின் அகரத்தில்
குறிலும் நெடிலுமாய்
என் மக்கள்..
மழலையின் சிரிப்பில்
இளமையை கண்டேன்..
சிரித்தேன்..
சந்தையில்
வாங்கிய வெங்காயம்
தாமதத்தால்
முளைக்கத் தொடங்கியது.
புதுப்பிக்க வேண்டிய
அட்டைகள் எல்லாம்
அஃறிணை மறந்து
அழத் தொடங்கின
எப்போதும்போல
திமிருடன் பயணிக்க
தன்னம்பிக்கை மட்டும்
தயாரானது..
இருதயம் பற்றிகொண்டு..
கொஞ்சமும் குழப்பமில்லாமல்
சூரியன் சுற்ற தொடங்கியது...
எழுந்தேன்...
ஆம் ..நான் விழ விழ எழுவேன்..
-ஆயிரம் ராஜா ([email protected])