நித்திரையுலகம்-ரிஷி சேது
நித்திரையுலகம் -1
இங்கு வந்த பின்
பெயர்கள்
எண்களாகின்றன ..
நித்திரையுலகம் - 2
யாரும் ஏற்காதவர்களின்
உடல்கள் பெரும்பாலும்
நிறையப் பிள்ளைகள் பெற்றவர்களுடையதாயிருக்கிறது ...
நித்திரையுலகம் -3
முகங்களில் கவலை
தோன்றிய உடல்கள்
இறுதி நேரத்தில்
உணர்ந்திருக்கலாம்
வாழ்வதின் ரகசியங்களை ...
நித்திரையுலகம் -4
விபத்தில் சிக்கியவர்களின்
உடல்கள் புண்ணியம் செய்யப்பட்டவை
உடனே பெற்றுக் கொள்ளப்படுகின்றன ...
நித்திரையுலகம் -5
இந்தப் பிணவறையின்
காவலாளி சிறந்த ஞானியாகிறார்
வாழ்வியல் போட்டியில்,
வாழ்வதன் சூத்திரம் நான்
அழிப்பதென்கிறார் ...
நித்திரையுலகம் -6
ஆறாமெண்ணில்
வைக்கப்பட்டிருக்கும் உடலை
தினமும் ஒரு பெண் பார்த்துப் போகிறார்
அக்கிழவரின் முன் நாள் காதலியாயிருக்கலாம் ...
நித்திரையுலகம் -7
இத்தனையுடல்களை
பார்த்த பின்னும்
அதிர்ச்சியாய்த்தானிருக்கிறது
ஒவ்வொரு புதிய உடல் வரும்போதும்
வாழ்வு ஒளித்து வைக்கும்
மரணமெனும் அதிர்ச்சி ...
நித்திரையுலகம் -8
தற்கொலை செய்து கொண்டவர்களின்
உடல்கள் பெரும்பாலும்
நண்பர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டு
எந்த மதச் சங்கடங்களுமில்லாமல்
எரிக்கவோ, புதைக்கவோ
செய்யப்படுகின்றன ...
நித்திரையுலகம் -9
சாதிக் கலவரங்களில்
இறந்தவர்களின் உடல்கள்
கலவரங்களடங்கிய பின்
சாதிக்கொடி போர்த்தப்பட்டு
பின் அடக்கம் செய்யப்படும்
அதன் பின்னும் வரப் போகும்
பிணங்கள் பெரும்பாலும்
அந்த அடக்க நிகழ்ச்சியில்
கலந்து கொண்டவர்களுடையதாயிருக்கும் ...
நித்திரையுலகம் -10
எய்ட்ஸாலிறப்பவர்களின்
பிணங்கள் பெரும்பாலும்
ஏதேனுமொரு சமூக அமைப்பால்
பெற்றுக் கொள்ளப்படுகின்றன ...
நித்திரையுலகம் 11
கேஸ் வெடித்து
இறந்தவர்களின் உடல்கள்
பெரும்பாலும் புதிதாய்
திருமணமான
பெண்களுடையதாயிருக்கிறது ...
நித்திரையுலகம் 12
சிரித்த முகமாகவே
இருக்கிறது
குழந்தைகளின் உடல்கள்..