"மூன்றாம் முறையாய்"-ரிஷி சேது
முதலில்
தகப்பனெனும் மிருகம்
தாயை அடிக்கவும் உதைக்கவும் செய்ய
நான் மிட்டாய் தின்று கொண்டிருந்த
அந்தாளில்
இரண்டாவது
காதலெனும் மாயை செய்து
காமம் துப்பிய நாளில்
நான் நம்பிக்கையை
உடலாக்கியதில்
மூன்றாவது
நீயும் உன் தோற்றமும் பார்த்து
கண்மறைத்த தோற்றப்பிழையில்
உனை பிடிப்பதாய் சொல்லி வாழ ஆரம்பித்ததில்
என்ன ஆச்சர்யம்
உனக்கு சொல்வேன்
எல்லா ஆண்களும் நீயாயில்லை
எல்லா பெண்களும் நானாயில்லை
சந்தோஷம் தான் -இதில்
எனக்கு
ஆணோடு பழக கொடுக்கப்பட்ட
எல்லா சந்தர்ப்பத்திலும்
நான் சந்தித்தவர்கள்
பெரும்பாலும் நீயாகவும்
அவர்களின் தோழிகள்
பெரும்பாலும் என்போலவும் தானிருந்தனர்
என் மீதான உன்
அவமதிப்பின் வலி
தீராமலிருக்கும் போதே
முடிவெடுப்போம்...
சின்ன பாம்புக்குட்டிக்கும்
தூக்கியெறியப் படும்போது
எத்தனை கோபம்..
உன் கேலியும் கிண்டலும்
எனை ஒன்றும் செய்யாது
நினைத்துப்பார் ஒரு நிமிடம்
உனை தனியனாய்
நான்
தற்காத்து தற்கொண்டான் பேணி
என்று தான் வாழவந்தேன்
ஆனால்
எத்தனை இரவுகள்
உன் மிருகத்தனத்தின்
ஆணிவேரை, அலட்சியத்தின்
தீவிரத்தை மெய்பித்ததிருக்கும்
போராடுதல் எனக்கு புதிதில்லை தான்
உன் புரிதலின் சுவாரசியம்
உணவுகளின் சுவையறிவு
உறவுகளின் வகையறிதல்
எனக்கு ஆச்சர்ய்மாகதான் இருக்கிறது
என்ன செய்ய
நான் பிறப்பிற்கு பிறகு
மூன்றாம் முறையாய் முட்டாளக்கப்பட்டேன்.