For Quick Alerts
For Daily Alerts
Just In
அப்பாவின் காகிதக் கப்பல்
-சண்முகா
அன்றொரு காலை
அடித்த மழையில்
அழுது பிடிக்க
அப்பா செய்தார்
அழகிய அந்தக்
காகிதக் கப்பல்
நான்காய் மடித்து
மூன்றும் ஒன்றுமாய்
குவித்து மடக்கிப்
பிரித்து இழுக்க
பிறந்தது அழகியக்
காகிதக் கப்பல்.
ஜன்னல் விட்டிறங்கி
வாசல் வெளிவந்து
தெருவில் திரண்டு
ஓடும் நீரில் விட
மிதக்குது அழகியக்
காகிதக் கப்பல்.
அசைந்து ஆடி
செல்லும் அழகை
ரசிக்கும் கண்கள்
குதிக்கும் கால்கள்
தூரம் போனது
காகிதக் கப்பல்.
ஓடிச் சென்று
மடக்கிப் பிடித்து
மீண்டும் விடுகையில்
மெதுவாய் நகருது
மெத்து மெத்தான
காகிதக் கப்பல்.
சடசடவென மழைபிடிக்க
சட்டென மூழ்கி
மிதந்து மேல்வந்து
பிரிந்து மறைந்து
மனதைக் கரைத்தது
காகிதக் கப்பல்.
குளமாகும் கண்களை
காணச் சகிக்கா
அப்பாவின் அன்பில்
மீண்டும் பிறந்தது
மற்றோர் அழகிய
காகிதக் கப்பல்.
-சண்முகா([email protected])
Comments
Story first published: Monday, January 28, 2008, 11:19 [IST]