எதிர்பார்த்துக் காத்திருந்த கண்களை சோகத்தில் நிரப்பிய மலேசியத் துயரம்.. ஒரு கண்ணீர் கவிதை
அன்பு அப்பாவிற்கு, அழகான மனைவிக்கு, மனம் நிறைய வைத்த மகனுக்கு......
வாசல்படி தடுக்கிய போதே வேண்டாம் என்றேன்!!!
வீணாக பயம் வேண்டாம் என்று வீம்பாய் கிளம்பினாய் நீ...
கிளம்புமுன் நீ பார்த்த பார்வை இன்னும் மனதில் இருந்து மறையவில்லை..
ஆனால் நீ மட்டும் மண்ணில் இருந்து மறைந்துவிட்டாயே இது நியாயமா?
அன்பான உன் மனைவி வீட்டில் காத்திருப்பாள்..
ஆசையாய் "அப்பா" என்று அழைக்கும் உன் குழந்தைகள் முகம் நியாபகம் வரவில்லையா உனக்கு?
அந்த கடைசி நிமிட உயிர் போகும் துடிப்பினை இப்போது தினம்தினம் எங்களுக்கும் கொடுத்து சென்று விட்டாயே நீ?
உனக்கான நிம்மதியான தூக்கம் கிடைத்து விட்டது...
ஆனால், இனி எப்போதும் எங்களுக்கு வாழ்க்கையில் தூக்கமே இல்லையே என்பதை நினைத்து பார்த்தாயா?
காதல் மணம் புரிந்து காலடி வைத்த என்னை, விதவை கோலம் தரித்து வீதியில் நிற்க வைத்தது ஏனோ?
உன்னை மார்போடும்,மடியிலும் தூக்கி வளர்த்த தாய்,தந்தையை மார்பில் அடித்து அழவைத்து சென்றது எதனால்?
அன்பாய் என்னை பள்ளிக்கு அழைத்து சென்ற நீ, இன்று பாதை மாறி சென்றது ஏனோ?
பலரும் பலவிதமாய் கூறிய போதும் நான் நம்பவில்லை....
இன்று நீ இந்த உலகில் இல்லை என்பதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.....
தந்தையாய்,மனைவியாய், காதலனாய், மகனாய் எல்லாமுமாய் இருந்த நீங்கள் ..
இன்று மண்ணாய் மாறி கடலில் கலந்ததுதான் உண்மை என்பதை மனது ஏற்றுக்கொள்ளவில்லை...
வானம் பறக்க ஆசைப்பட்ட நீ இன்று வானிலேயே கரைந்து போனது..
எங்கள் வாழ்க்கையையும் நீரிலேயே ஜீவசமாதி ஆக்கிவிட்டதுதான் நிதர்சனம்...
வாழ்க்கை முழுதும் வலி தரப்போகும் அன்புடன்,
அன்பு மனைவி, கணவன், அப்பா, அம்மா, குழந்தைகள், சகோதர, சகோதரிகள்