வெடித்து சிதறியது மனிதம்
Recommended Video
-சுஜாதா பூபதிராஜ்
அன்னை மடியை வெற்றிடமாக்கி உன்னை
ஆண்டவன் இடத்தில் அனுப்பி வைத்தான் ஒரு காமுகன்
விளையாடும் பருவத்தில் இருந்த உன்னை
விதிக்குப் பலியாக்கினான் அந்த கயவன்
அடித்து கொலை செய்தான் அநியாயமாய்
நீ தீயில் துடித்து மடிந்தாய் அகோரமாய்
விளையாட்டு வயது முடிக்கும் முன்னே
கொலையூட்டப் பட்டாய் கண்மணியே
துடித்து அடங்கியது உன் உயிர்
வெடித்து சிதறியது மனிதம்
இங்கே ஹாசினியாகிய நீ
அண்டை நாட்டில் ஜைனப் என்று இன்னும் ஒரு பூ
உன்னை போல் ஆயிரம் ஆயிரம் குழந்தைகள்
மலர்வதற்கு முன்பே மொட்டாகவே கசக்கப்பட்டு கருகிப் போகும் அவலம்
என்றுதான் முடிவுக்கு வரும் இந்த காம கொடூரம்
உன் மூச்சு அடங்கு முன்னே
உனக்கு கண்ணீர் விட கூட நேரம் கொடுத்தானோ
அம்மா என்று கதறி கூப்பிடவும் இடைவெளி விட்டானோ
தெரியவில்லையே
பாவி அரக்கனை ஆயிரம் முறை தூக்கில் போட்டாலும்
அவன் செய்த பாவத்திற்கு அது குறைவே
அணு அணுவாய் அவனை அடித்து கொன்றாலும்
அதுவும் பாவமில்லை அதுவும் குறைவே
உன்னை போல் பூக்கள் வாழ
தகுதியில்லாததாய் போய் கொண்டிருக்கிறது பூமி
நீ சேர்ந்த இடம் சொர்க்கமே
அங்கே உம்மை சீரழிக்க யாருமில்லை
அண்ணா மாமா சிற்றப்பா என்று உறவு முறை கூறி
கற்பழிக்க ஒருவருமில்லை
கவலைப்படாதே கண்மணி
இந்த கொடூர அரக்கன் அங்கே வர வழியேயில்லை
ஏனெனில் அவன் நேரே போக போவது நரகத்திற்கு.
நிம்மதியாய் கண்ணுறங்கு கண்மணியே.
உன் பிரிவால் உன் பெற்றோருக்குத்தான்
இந்த பூமியே நரகமாகிப் போனது.
அவன் செய்தது ஒரு கொலை மட்டுமல்ல
உயிருக்குயிரான உன்னை இழந்து
உயிருள்ள பிணங்களாய் மாறி விட்ட
உன் பெற்றோரையும் சேர்த்து.
உன்னோடு அவர்கள் சேரும் காலம் வரை
அவர்கள் நிம்மதியாய் கண்ணுறங்க
கடவுளிடம் விண்ணப்பிப்பாய் கண்மணி
பால் பற்கள் மாறுமுன்னேபடும் பாலியல் துன்பம் அங்கில்லை
ஆகவே சொர்க்கத்தில் சிரித்திடுவாய் ஹாசினி.