பற்றிப்படர்ந்திட தடியுமில்லை.. வேரினை ஊன்றிட மண்ணுமில்லை #Mullivaikkal
சென்னை: முள்ளிவாய்க்கால் 10 ஆண்டு நினைவு தினம்.. உலகெங்கும் உள்ள தமிழர்கள் உணர்ச்சிப் பெருக்கில் உள்ளனர்.
தமிழர் வாழ்வில் மறக்க முடியாத நாளான மே 18ம் தேதியையொட்டி நமது வாசகர் திவாகர் நவரத்னம் எழுதியுள்ள ஒரு உணர்ச்சிக் கவிதை...
முள்ளிவாய்க்கால்
கந்தகத்தை சுவாசித்தோம்
குருதியாற்றில் குளித்தோம்
தலைவன் பின்னால்
தமிழனெல்லாம் தவமிருந்த பூமியது
அங்குல நிலமும் ஒவ்வொரு கதை பேசும்
கஞ்சிக்கு நின்றவர் கணைக்கு விழுந்த
கதைசொல்லும் பாதுகாப்புக்காய்
பதுங்ககழியில் பதுங்கியவருக்கு
பதுங்ககழியே பாடையான கதை சொல்லும்
உயிரற்றமகவை விட்டுவிட மனமின்றி
தோளிற்சுமந்த தந்தையர் கதை பேசும்
வீட்டிற்கொருவரை களத்துக்கனுப்பி
கண்ணீருடன் காத்திருந்த
அன்னையர் துணையவள் கதை பேசும்
பொத்திவளர்த்த குஞ்சுகளை கொத்திப்போகும் பருந்தினை
எதிர்த்திட முடியாமல் தவித்திட்ட
பெற்றவர் கதை பேசும்
முன்னே நடப்பவன் இமைக்கு நொடிக்குள்
மடிந்திடுவான் அள்ளி அணைக்க முடியாமல்
உயிருக்காய் ஓடியவர் கதை சொல்லும்
புலரும்பொழுதெல்லாம் மரணத்தில்
புலர்ந்த கதை பேசும்.
குருதியாற்றில் குளித்தமண்
எத்தனை கதை பேசும் மடை
திறந்த வெள்ளமாய் கொட்டித்
தீர்த்திடும் வாயிருந்தால்
ஈழக்கனவை கடைசிவரை சுமந்தே
இங்கேயல்லவா புதைத்தோம்
மூபத்தாண்டு கனவல்லவா எம்
கனவு கனவாகவே இன்னும்...
பத்தாண்டில் நாங்களிங்கே பரிதாபங்களாய்
எடுப்பார் கைப்பிள்ளையாய்
அரசியல் முதல் அந்தரங்கம் வரை
முள்ளிவாய்க்கால் பேசுபொருள்
முடிந்துவிடவில்லை எம் அவலம்
முடிவிலியாய் தொடர்கிறது
தேசம் துறந்து பரதேசம் பறந்துவந்தாலும்
கண்மூடும் வேளையிலும் கனவாய்
வந்து கொல்லுது
அழகான வாழ்விருந்தது அழிவினில்
மீண்டிட துணிவிருந்தது மலையாய்
நம்பியிருந்த தலைவன் இல்லையென்றானதும் எல்லாம்
தப்புத்தாளங்களாய் கண்முன்னே
வந்தவன் போனவன் நிண்டவனெல்லாம்
புதுப்புது பெயரில் புலிவேடமிட்டு
நித்தமொருகூத்து இப்போ அரங்கேற்றம்
ஆழியில்லாக்கப்பலாய் அல்லாடும்
எம்மில் சவாரிக்கானகாத்திருப்புக்கள்....
வேள்விக்காய் நாமிறைத்தது
மூன்று தலைமுறைக்கான
முப்பதுவருடவாழ்வுமட்டுமா
அடுத்த தலைமுறைக்கான நிமிர்வையும்தான்
தொட்டுவிடும் தூரத்தில் இப்போ தொடுவானமாக ஈழம்மட்டுமா
செத்தவர் தொலைந்தவர்க்கான நீதியும்
பற்றிப்படர்ந்திட தடியுமில்லை
வேரினை ஊன்றிட மண்ணுமில்லை
நாதியற்ற மக்கட்கூட்டமாயெம் வாழ்வு
மாவிலாற்றுப்பயணம் நந்திக்கடலுடன்
விடையேறியது
பரிநிர்வாணமானது புத்தர்மட்டுமா
நாங்களும்தானே