நட்சத்திரங்கள் !
மலராத வெள்ளை மொட்டுக்கள்
உலராத வியர்வை துளிகள்
ஓயாத கண் சிமிட்டல்கள்
காயாத பனி துளிகள்
இரவில் விரைந்த
கரிய நங்கை
இடறிய போது
தெறித்து சிதறிய
தெள்ளிய முத்துக்கள்
அகன்ற வானத்தில்
அகலாத
அகல் விளக்குகள்
அல்லவா நீங்கள்,
இரவில்
தினந்தோறும் தீபாவளி என்பதற்கு
ஆதாரம் நீங்கள்
கரிய வயலில்
அரிய விதைகளை
தெரியும்படி பயிரிட்ட
அறிவாளி யார்?
கோலத்தை
காலத்தே முடிக்காமல்
அலங்கோலமாய்
புள்ளி போட்டு விட்டு
தள்ளி போய் நின்ற
கள்ளி யார்?
மண்ணில்
விடிந்த பின்
வடிவாய் கோலமிடுவது
வழக்கம்..
விண்ணிலோ
அன்றாடம்
அந்தி
வந்த பின்னரே கோலமிடும்
விந்தை என்ன?
இரவில் தேடுவதாலா
இத்தனை கண்கள்?
கனவுகளுக்கு வழி காட்டவா
கனிசமான மின்விளக்குகள்?
சத்தமில்லா வானம்
சாத்தியமானது எப்படி?
மயான அமைதியின்
மாயம் தான் என்ன?
இத்தனை கண்களிருந்தும்
வாய் ஒன்று இல்லையே!
திறந்த வெளியில்
திரிந்து வந்த
சூரியனை மறைக்கும் இரவின்
சூசகம் என்ன?
கறுப்பு போர்வை
இறுக்கமாய் இருக்க இரவு
பொறுத்திய பொத்தான்களில்
இருக்கிறது பதில்
இன்றைய கொழுந்து
நாளைய சாம்பல்
என்று எரிப்பு
மேலும் ஒரு சலிப்பு..
ஆனால் நீங்களோ
முன்பு எரிந்தீர்கள்
இன்று தெரிந்தீர்கள்
தூரத்து அழகு
கண்ணுக்கு பச்சை
பழமொழியின்
பொருள்என்ன-
கிட்ட வந்தால்
குட்டு வெளியாகும்;
அது போல்,
தொலைவால் தானே
தோன்றினீர்கள் நட்சத்திரங்களாய்?
உங்களில் யாரெல்லாம்
திங்களைப் போல்
பிரதிபலித்தீர்கள், எரியாமல்?
- ரவி பழனிவேலு