யாருக்கு யார் எதிரி ?
பூமிக்கு எதிரியல்ல...
மனித குலத்துக்கு எதிரி!
மனிதனின் பூதாகார எதிரியாக
கண்ணுக்கே தெரியாத ஓர் உயிரி!
தன்னை மட்டுமே முன்னிறுத்தி
சுயநலத்துக்காக மற்ற
எல்லா உயிர்களையும்
கொஞ்சமும் நினைக்காமல்
மனிதமே இல்லாமல்
நடந்து கொண்ட மனிதனை
முடக்கிய வைரஸ்!
மூச்சுவிட முடியாமல்
தவித்த பூமியை
வெகு காலம் கழித்து
சுவாசிக்க வைத்த வைரஸ்!
குடும்பத்தார் முகம்கூட பாராமல்
ஓடியோடி
எந்திரகதியில் பயணித்தவரை
ஆசுவாசம் கொண்டு
முகம் காண வைத்த வைரஸ்!
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும் -
இது சான்றோர் வாக்கு!
கடிவாளம் பூட்டாத
மனிதனின் செயல்களுக்கு
அவன் தன் நிலை உணர
பலி வாங்கி பழி வாங்கிய
ஒரு உயிர்!
அதுவும் சிற்றுயிருக்கும் கீழான
நிலையில் ஓர் உயிரி!
உலகையே நகர முடியாமல்
முடக்கிப்போட்ட கொரோனா
இனியேனும் மனிதன் உணர்வானா
இல்லை மீண்டபின்
முன்னிலும் அதிகமாய்
இந்நிலை வென்ற
செருக்கில் ஆடிடுவானா?
- ஆகர்ஷிணி