பனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்... பதவியற்று போனாலும் கலைஞர் கலைஞர்தான்
பனிமலை கரைந்தாலும் இமயம் இமயம்தான் என்று தொடங்கும் ஒரு கவிதையை திமுக தொண்டர் எழுதியுள்ளார்.
Recommended Video
சென்னை: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதிக்காக அவரது தொண்டர் ஒருவர் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
கருணாநிதி கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் முக்கிய உறுப்புகள் செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் எதுவாக இருந்தாலும் 24 மணி நேரத்துக்கு பிறகே தெரியும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இதையடுத்து கண்ணீருடன் தொண்டர்கள் மருத்துவமனைக்கு வெளியே காத்து கிடக்கின்றனர். அவர்கள் எழுந்து வா என்ற கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அவர்களில் ஒரு தொண்டர் கருணாநிதிக்காக எழுதிய கவிதை இதோ...
பனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்...
பாதங்கள் தேய்ந்தாலும் சிங்கம் சிங்கம்தான்...
பாலற்று போனாலும் தாய்மடி தாய்மடிதான்...
பதவியற்று போனாலும் கலைஞர், கலைஞர்தான்...
அன்பான ஆசானே... நான் அதிகம் நேசிக்கும் மானே....
விரிந்த மார்பின் நீளகலத்துக்கு விழிப்பும் விருதும் கொண்டவனே
உன் பொதுவாழ்வு கடல் பதவி படகு
படகு கவிந்தால் கடலுமா கவிழும்?
அண்ணாவும் செந்நாவும் பேனாவும் உள்ள வரை ஓயாது உனது பணி
காயாது தன்மானம் சுற்றவே பிறந்தது பூமி
சுடவே பிறந்தது கதிர் உலவ பிறந்தது காற்று
உழைக்க பிறந்தவன் நீ...
வெற்றி தோல்வி இரண்டிலும் எப்படி நன்மை செய்கிறாய்
வெற்றியால் தமிழனை வாழ வைக்கிறாய்
தோல்வியால் தமிழனை கற்க வைக்கிறாய்
பனித்துளியும் கடலாகும் உன் சாதனை நீடித்தால்
துரும்பும் இரும்பாகும் உன் போராட்டம் நீடித்தால்
8 கோடி இதயங்களில் அடைப்பு வராது உன் ஓர் இதயம் மட்டும் ஒழுங்காக துடித்தால்
வாழ்க நீ... வாழ்த்த வயதில்லை...வணங்குகிறேன்
ஐயா மீண்டும் நீங்கள் உடன்பிறப்போடு வந்து கையசைத்து
உடன்பிறப்பே ஓடிவா ஓடிவா என்ற குரலை நாங்கள் கேட்க வேண்டும்
என்று அந்த தொண்டர் கவிதை எழுதியுள்ளார்.