குடிக்கிற பழக்கம் கொடியது.. டைமிங்கில் வைரலாகும் பாடல்
சென்னை: குடிக்கிற பழக்கம் கொடியது என்ற பெயரில் முன்னாள் எம்எல்ஏவான பாவலர் கொ.வீ.நன்னன் மேடைப் பாடல் வடிவிலான கவிதை எழுதியுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.
குறிப்பாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்துள்ள இன்றைய தினத்தில் இந்த கவிதை தமிழக சூழலுக்கு ரொம்பவே பொருந்திப் போகக்கூடியதாக உள்ளது. சுய ஒழுக்கம்தான், நம்மை காக்குமே தவிர, மதுபான கடை திறப்பையோ அல்லது மூடலையோ சார்ந்து நாம் இயங்குவது பலனளிக்காது. எனவே மதுவின் தீமை குறித்த இந்த கவிதை கவனம் ஈர்க்கிறது.
அந்த கவிதையை பாருங்கள்:
குடிக்கிற பழக்கம் கொடியது
குடிக்கிற பழக்கம் ரொம்பக் கொடியது... அண்ணாச்சி குடிக்கிற பழக்கம் ரொம்பக் கொடியது-நீ
குடிக்காம இருந்துகிட்டா குடும்பத்தோடு
சந்தோஷமா இருக்க முடியுது
பொழுதும் நல்லாவிடியுது-மதுவை
குடிக்கிற பழக்கம் ரொம்ப கொடியது-(ஆமா...குடிக்கிற)
கெடைக்கிற பணம்காசு வீணாகிப் போகாம
நடக்கிற வாழ்க்கைக்கொரு உதவியாகுது
நல்ல உதவியாகுது
எடுக்கிற முடிவுயெல்லாம்
ஏகோபித்து ஆலோசித்து
எடுத்தாலே வெற்றிக்கொரு
வழிபொறக்குது ஆமா வழிபொறக்குது-(குடிக்கிற)
பெண்டாட்டி புள்ளை குட்டியும்
பெற்றத் தாயும் தந்தையோடு
பொறந்தவங்களும் ஒத்துமையா
வாழக் கத்துக்கணும்-பொதுவென்று
எதுவாக இருந்தாலும் அது நமக்கு
மனத்தாங்கல் இல்லாம பகிர்ந்துக்க வேணும்-(குடிக்கிற)
மதுவகையோ புகையிலையோ
எது ஒன்றைக் குடித்தாலும்
முதுமை அடைந்து அதிவிரைவில்
இளமையைப் போக்கும்
இதுவரை இல்லாத புதுவிதமான நோய்கள்
எலும்புக்குள் உருவாகி உயிரினைத் தாக்கும்
காமாலைவரும் கவலைதரும்
கண்ணுக்குள் ஒருதிரை மூடும்
கோமாளிப் போல் கூனல்விழும்
குக்கி குக்கி இருமல் வரும்
ஆண்மைப் போகும் ஆசைப்போகும்
அப்புறம் என்ன? எல்லாம் போகும்-(குடிக்கிற)
இவ்வாறு அந்த பாடல் உள்ளது.