அப்பாவும் வெற்றிலையும்.. ஜெர்மனியில் இருந்து ஒன்இந்தியா வாசகர் எழுதிய உருக்கமான கவிதை!
ஜெர்மனியில் இருந்து ஒன்இந்தியா வாசகர் ஜேசு ஞானராஜ் எழுதியிருக்கும் அப்பாவும் வெற்றிலையும் என்ற உருக்கமான கவிதை உங்களுக்காக!
சென்னை: ஜெர்மனியில் இருந்து ஒன்இந்தியா வாசகர் ஜேசு ஞானராஜ் எழுதியிருக்கும் அப்பாவும் வெற்றிலையும் என்ற உருக்கமான கவிதை உங்களுக்காக!
அப்பாவும் வெற்றிலையும்!!
______________________________
இங்கின வா
வெத்தல வாங்கிட்டுவா
சொன்னார் அப்பா!
எவ்வளவு என்றேன்?
50 பைசாவுக்கு 2
கடைக்காரர் சொன்னார்!!
அப்பாவின் வாய் சிவப்பாய்!
சிவப்பு ஆரஞ்சு மிட்டாய்
என் கையில்!
வளர்ந்தேன்!
பையன் லீவுக்கு வந்திருக்கான்
குறட்ட வுடாம தூங்குங்க!
அம்மாவை அதட்டாத அப்பா!!
எனக்காக ஒருக்களித்தே உறங்கிய அப்பா!
காலடியில் அத்தான் அபுதாபியிலிருந்து
கொண்டு வந்த புது செருப்பு!!
என் ஓரப்பார்வையில் அந்தப் புதுசு!
நீ காலேஜிக்கு இதை போட்டுட்டு போ
கண்களினால் பேசிய அப்பா!!
அவரை எதையு் புதுசா
போட விடமாட்டியே!
இந்தமுறை அப்பாவுக்காய் அம்மா!!
வளர்ந்தேன்!
வளர்ந்தேன்!!
பெட்டிக்கடையின் முதலாளி!
மிட்டாய்களின் மொத்த டீலர்!!
செருப்புக்கடையின் முதலாளி!!!
வளர்ந்தேன்!
வளர்ந்தேன்!!
வளர்ந்தேன்!!!
வீடு கட்டினேன் !
பின்புறத் தோட்டத்தில்
வெற்றிலைக் கொடிகள்!!
அருகினில் சென்று
மெதுவாய் இலைகளைத்
தடவிப் பார்க்கிறேன்!
கை நிறைய பறித்து
அப்பாவின் கைகளில்
கொடுக்க ஆசை !!
அவர் தூக்கம் கலைய
காத்திருக்கிறேன்
மணல் மேட்டில்!
எந்திரிச்சி வாங்கப்பா
எனக்கு ஆரஞ்சி மிட்டாயி
சாப்பிடணும்!