தற்கொலை செய்யவில்லை நீ... தற்கொடை செய்தாய்!
-ராச்குமார் பரமானந்தம்
அனிதா
விழிகளையே விளக்காக்கி
வாழ்வின் இருள் கடந்த இளஞ்சுடரே
பட்டினியில் பசியாறி-நோய்வாய்
பட்டினி நம் சாதி மாளாமல் காப்பேன்.
படித்து நானே மருத்துவராவேன்
என கட்டியம் செய்த கண்மணியே
நீட் என்னும் கள்ளப்பருந்தை-சிற்றலகால்
கீரி வெளிக்காட்டிய வெண்புறாக் குஞ்சே.
பச்சைக்கொழுந்தே - உன்
பசுங்கழுத்தை நசுக்கி உயிர் குடித்த
கயிறு -கயிறல்ல கண்ணே -அன்று
பெரியார் அடித்தும் சாகாமல் தப்பிய வெறி பிடித்த மலைப்பாம்பு!
துளித் துளியாய் உன்னுயிரை
பாழுங்கயிறு வதைக்கையில்
எம்செல்லமே நீ துடித்த பெரு வலி வாதை
நினைக்கையிலே பதைக்கிறதே
நெஞ்சை சிங்களன் குண்டாய்
சிதைக்கிறதே. தமிழ் வானெங்கும் தீரா
வலியை விதைக்கிறதே.
தற்கொலை செய்யவில்லை நீ
தற்கொடை செய்தாய் என்பேன்.
உன்னுயிரைப் பிழிந்து எமக்கு
உரமேற்றிய வரமடி நீ
ஒருத்தி படித்து மருத்துவராகும்
உளக்கனவை விடுத்து
ஓராயிரம் ஏழை தமிழ் குருத்துகள்
மருத்துவராகும் பெருங்கனவுக்கே
உதிரம் கொடுத்தாய். உயிர் கொடுத்தாய்.
அனிதா எம் ஆவி மேவிய புனிதா
இனி தா தமிழர் எமக்குள் ஒற்றுமை.
ஏந்துவோம் உன் கனவை உணர்வை.