தம்பி புறப்படு! #ஸ்டெர்லைட்
- ஆனந்த்
கந்தக சுவாசம்,
கறைகொண்ட
நீரென்று ,
இழிநிலை
வாழ்வுகொண்டால் ,
மலத்தினில் வாழும்
பன்றிகள் சிரிக்காதா?
அரசாங்கம் நம்பாதே
போராட்டம் விடு
நுரையீரல்
சுவர் படிந்த
கரிக்கேட்ப
காசளிப்போம்
அமைதியாய் இரு
ஆதார் இணை - என்றே
அரசு சொல்லும்.
எவர் கண்டார்
சுவாசத்திற்கும்
சுங்கவரி
அவர்கள்
திட்டமாய் இருக்கலாம்.
கார்பன் தாய்ப்பால் அருந்தி
கருகும் இளம் மொட்டுகளோ
தாமிரத்துடன் உருகும்
தாய்மார்கள் உயிரோ
கரிப்புகை இருமலோ
கண்ணின் எரிச்சலோ
கவலையிங்கு
எவர்க்குமில்லை..!
உரிமைகள் தொலைத்து
உடல்கூடு சுமந்து
உயிர் வாழும் கூட்டமிது.
ரட்சகன் நீதான்
வா வந்து
களமிறங்கி ரட்சி
அறிந்து கொள்
சுத்தகாற்றை
சுவாசிக்கும்
அண்டை தேச
அகதிகள் வாழ்வு
நம்மிலும்
உயர்ந்ததடா.
தம்பி
உன் காதலியின்
முத்தத்தை
கரிப்புகையா
சுமந்து வருவது?
என்னடா
காதலன் நீ?
புறப்படு
புற்றுநோய்க்கு
போகுமுயிர்
புரட்சியில் போனால்
பெருமையடா .
வந்து கைகோர்
சிவப்பு வெள்ளை
அணுக்கள் போல்
புரட்சி அணு என்றொன்று
புதிதாயுன் ரத்தத்தில்
பிறக்கட்டும்,
ஏறும் நரம்பின்
முறுக்கத்தில்
ஆலையின்
சுவர்கள்
பறக்கட்டும்.
வா
களமிறங்கு
அடுத்த
தலைமுறை
சுவாசத்தில் -உன்
புரட்சி வரலாறு
இருக்கட்டும்..!