கூட்டாஞ்சோறாய் கலந்திருந்த நட்பு..!
கரம் கோர்த்து செல்லாமல்
மனங்கள் கோர்த்து சென்ற நாட்கள்
கண்ணீரின் சுவை இன்னதென அறியாமல்
சிரிப்பின் சத்தத்தை மட்டும் கேட்ட நாட்கள்
அரைக்கால் சட்டை முதல் அம்மாவின் ஊறுகாய் வரை
அத்தனையும் ஓன்று விடாமல் பகிர்ந்த நாட்கள்
ஒரு அறையிலும் வீடுகள் உண்டென
உணர்த்திய விடுதி அறை
அன்னையையும் தாண்டிய அன்பு உண்டென
உணர்த்திய தோழியின் அன்பு
கலாட்டாக்களை மட்டுமே கலந்து
சுவைத்த காலை காபி
சுவைத்தல் மறந்து பசித்தலுக்கு
சாப்பிட சொல்லித்தந்த மெஸ்
இருந்தும் இல்லாமல் முடிந்த
வகுப்பறை பாட நேரங்கள்
படித்தும் பிடிக்காமலும் எழுதி
தீர்த்த தேர்வு தாள்கள்
தீட்டான இடமென நினைத்து
நுழைவே நினைக்காத நூலகம்
ஆண் பெண் நட்பிலும் அழுக்கற்ற
அழகு உண்டென சொல்லிய நட்பு
களைகட்டும் ஊர் திருவிழாவை போல
சிம்போஸியம் ஆண்டு விழா
அதற்கு மட்டுமே கட்டும் புடவையோடு
வந்து ஒட்டிக்கொள்ளும் நாணம்
ஆறு மாதத்தின் ஆட்டத்துக்கும்
விடுப்பு கொடுத்து விழுந்து விழுந்து படித்த
செமஸ்டர் ஸ்டடி ஹாலிடேஸ்
அதுவரை புரியாத இன்ஜினீரிங் பாடங்களை புரியவைத்த
தேர்வுக்கு முந்தய அதிசய இரவுகள்
பஸ் காசை மட்டும் பர்சில் வைத்து
ஊர் சுற்றிய நாட்கள்
விசில் பறக்க வாய் மூட மறக்க
தியேட்டரில் பார்த்த சினிமாக்கள்
சிறகுகள் இல்லாமலே கனவுகளின் உலகில்
காற்றோடு பரந்த கல்லூரி சுற்றுலாக்கள்
தேர்வுக்கு முன்னாடி மட்டும் கட்டாயம் போகும்
அந்த கோவில் தரிசனங்கள்
பழம் பழம் என படித்தவனையும் படிக்கவிடாமல்
பாழ் செய்த பெருமை கொண்டோம்
களவும் கற்று மாற என காப்பியடித்தலை
கற்றுத்தந்த பீறியடிக்கல் தேர்வுகள்
வராத ஓவுட்புட்டை வா வா வென அழைத்து
குழந்தையாய் அழுத ஆய்வக தேர்வுகள்
ஆசிரியரின் பாடத்துக்கு அழகாய் தலையாட்டும்
ஆர்வமான முதல் பென்ச் மாணவனாய்
கழிந்த முதல் வருடம்
அடக்கத்திலிருந்து அசால்ட் ஆறுமுகமாய் மாறிய
ஆரம்பம் அந்த இரண்டாம் வருடம்
கல்லூரியின் துப்பட்டாக்கள் வீசிய சாமரமாய்
காதலையும் கண்களோடு சேர்த்த மூன்றாம் ஆண்டு
முடிய போகிறதே என முடிக்க விரும்பாமல்
அணுஅணுவாய் அனுபவித்த இறுதி ஆண்டு
இறுதியாய் மெழுகுவர்த்தியோடு கரைந்து
பரிமாறிக்கொண்ட பிரிவு விழா
என்ன எழுதவென தெரியாமல் எது எதுவோ எழுதி
இதயங்களை பரிமாறிக்கொண்ட ஆட்டோகிராப்
எப்பவும் தொடர்பில் இருப்போம் என்று கண்ணீரோடு
கைகுலுக்கி விடைகொடுத்த நட்பு
இறுதியாய் எதையோ தொலைத்துவிட்டதை போல
திரும்பி திரும்பி கல்லூரி வளாகத்தை பார்த்தபடியே
கடந்து சென்ற அந்த கடைசி நாள்
எங்கு எங்கிருந்தோ
வந்து இறுதியில்
கூட்டான்சோராய் கலந்திருந்த
கல்லூரி நட்பு
எங்கு எங்கோ
தொடர்பே இல்லாமலிருந்தாலும்
நெஞ்சின்ஓரம் கரைந்திருக்கு
சுகமான நினைவுகளாய் !!!
நண்பர்கள் தினம் நினைவுகளில் வீசி சென்ற சாரலோடு
- யாழினி வளன்