காலம் எனும் மருந்து!
காலமெனும் மருந்து
பல நேரம் சுமக்கும் கவலைகளுக்கு
விடைகொடுத்து செல்லும்
சில நேரம் சுமக்கும் கனவுகளுக்கும்
உரம் போட்டு வளர்க்கும்
சிரித்துப் பின் அடையாளமில்லாமல் மரித்துப்போன
காதல் காயங்களுக்கும் மருந்து
சாதல் வரை உதறி தள்ளிய பெற்றோர்களையும்
சுலபமாய் மாற்றும் மந்திரம்
உறவுகளின் பிணக்கு மாமன் மச்சான் சண்டை இப்படி
உடைந்த எல்லாம் ஒட்டிக்கொள்கிறது எதோ
ஒரு வாரிசு திருமண வைபவத்தில் அழகாய்
காலமெனும் மருந்து செய்யும் மாயம் தானே
ரணம் ஏற்படுத்திய வார்த்தைக்கு
கணம் தப்பாமல் காத்திருக்கும் எதிர்பார்ப்புக்கு
உடைந்து போன நேசங்களுக்கு
உறக்கம் வாரா இரவுகளுக்கு
துரோகம் இழைத்த உறவுகளுக்கு
மனதில் இருக்கும் கசப்பு மூட்டைக்கு
எல்லாவற்றையும் காலமெனும் மருந்து
கடந்து போகச் செய்துவிடும்
மதம் என்ற போதை எண்ணத்தை
மனதில் ஊறிய சாதிய வெறிதனை
கவுரவ கொலைவரை செல்லும் மடமை
இரக்கமற்ற சுயநலம் கொண்டு வளரும் தலைமுறை
பச்சிளம் சிறார் பாலியல் வன்கொடுமை
ரத்தம் சதையாக பார்க்கப்படும் நிலைமை
சத்தமில்லா வன்முறையென நிகழும் இவையெல்லாம்
காலமெனும் மருந்து கடந்து போகச் செய்திடுமா?
- இங்க்பேனா சகாய தேவி, நாகர்கோயில்