100 குரல்களில் தமிழன்பனின் 1000 கவிதைகள்... அமெரிக்காவில் ஓர் கவிதைத் திருவிழா!
டல்லாஸ்(யு.எஸ்): கவிஞர் ஈரோடு தமிழன்பனின் கவிதைத் தொகுப்பில் உள்ள 1000 கவிதைகளை வாசிக்கும் ஒரு கவிதைத் திருவிழா முதன்முறையாக அமெரிக்காவில் அரங்கேற உள்ளது.
டல்லாஸ் நகரில், மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெறும் இந்த விழாவில் குழந்தைகள், தமிழ் ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு கவிதை வாசிக்க உள்ளார்கள்.
கவிதை வாசிப்பில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழும் மற்றும் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் நூல் ஒன்றும் வழங்கப்பட உள்ளது. கவிஞன் வாழும் காலத்திலேயே இப்படியொரு விழா அமெரிக்க மண்ணில் நடக்க இருப்பது தமிழுக்கும், தமிழர்களுக்கும் மிகப்பெரிய பேறாகும்.
பள்ளி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்யலாம். பதிவு செய்தவர்களுக்கு கவிதைகள் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும். வெளியூரில் உள்ளவர்களும் பங்கேற்பதற்கு வசதியாக பல்வழி அழைப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாமல் பங்கேற்க இயலாது. புதன்கிழமை, அக்டோபர் 25,ம் தேதி வரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று விழா ஏற்பாட்டாளார்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த கவிதைத் திருவிழாவில் வட அமெரிக்கா முழுவதிலிருந்தும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பங்கேற்கலாம். முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், முதல் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். https://www.facebook.com/MetroplexTamilSangam/ என்ற ஃபேஸ்புக் பக்கத்திலும் பார்த்துக் கொள்ளலாம்.
கவிதைத் திருவிழா அக்டோபர் 28ம் தேதி சனிக்கிழமை, மாலை 3:30 மணி முதல் 5:30 வரை ப்ளேனோ வில் அமைந்துள்ள Haggard Library அரங்கத்தில் நடைபெற உள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.
-இர தினகர்