உன்னை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சுக்குள் ஒரு ஓசை!
சென்னை: மழை குறித்து நமது வாசகர் தனிஸ்ரீ எழுதிய கவிதை....!
வானமெங்கும் இருள் பரப்பி - அடுத்த
மழைக்கு காத்திருக்கும் இந்நேரம்
எல்லோர் மனத்திலும் ஓர்
இனம் புரியாத பயம்
ஆம் நாளை என்னவாகும் என்ற
கனவுகளோடு சிறுகுழந்தைகள்.
குழந்தைகளை எங்கே அனுப்புவது என்ற
கவலையோடு கணினி அம்மாக்கள்.
இது எதுவுமே தெரியாமல் வேலை
பார்க்கும் அப்பாக்கள்.
மழையும் ஒரு பெண்தானே - அதனால்தானோ
அது மக்களை காக்கும் - தன் மக்களை
காக்கும் கடமையை செவ்வனே செய்கிறது.
அஞ்சாமல், அவசரப்படாமல் நின்று
நிதானமாய் நிமிடத்தில் மழை பெய்து-
சேமியுங்கள் என் செல்லங்களே - மழைநீரை
சேமியுங்கள் என் செல்லங்களே என
சிரிக்கிறது - இடி மின்னலுடன்
இசையை பொழிகிறது.
குடிசை அம்மா முதல் - அடுக்கு மாடி
தரைதள அம்மா வரை - இனம் புரியாத
கலக்கம் கண்ணில் நிம்மதியில்லா குழப்பம்.
அடுத்தநாள் எப்படி ஆபிஸ் - போவது
யாரிடம் குழந்தையை விடுவது.
போகும் வழியில் இருக்கும் - பள்ளங்களை
கணெக்கெடுக்க வேண்டும் என்ற சிந்தனையோடு
நினைவுகள் நீண்டுகொண்டே நகர்கிறது...
அன்று விடுமுறை என்றதும் துள்ளி
குதித்து ஓடியது நினைவுக்கு வந்தது- குழந்தைகளாய்.
கடமை என்ற கயிற்றை தூக்கி கொண்டு
ஓடியதில் கணினி மட்டுமே வாழ்க்கையானது.
நினைத்து பார்த்தால் நிம்மதியை
தொலைத்தது மட்டுமே நிஜம் .
மானுடத்தின் மனநிலையை உணர்த்திய
என் மழையே நீ வருக - உனக்காக
வள்ளுவரை போல் வான் சிறப்பு எழுத
முடியாமல் போனாலும் - உன்னை
நினைக்கும் போதெல்லாம் வலம் வருகிறது
நெஞ்சுக்குள் ஒரு ஓசை.
- தனிஷ்ஸ்ரீ, சென்னை