மொட்டின் வாசத்தை போல சுகமான காலம்!
- யாழினி வளன்
சுமை தூக்கி கழுதைகளாய் புத்தகம் சுமந்தாலும்
இதயம் கவலையின் சுமை அறிந்ததில்லை
ஏழுமலையானை விட என் நண்பன் தான்
எனக்கு பெரிது என நினைத்த காலம்
ஐயர் வீட்டு பருப்பு சாதமும் பாய் வீட்டு பிரியாணியும்
சேர்த்து சுவை பார்த்த நாக்கு
கணிதத்தில் நூறு கிடைக்காமல் 99 வாங்கியதற்கு
ஒரு ராத்திரி முழுவதும் அழுது வீங்கிய கண்கள்
ஒன்றாம் ரேங்கை தவற விட்டு
ரெண்டாம் ரேங்க் வாங்கின போது
மலை உச்சியில் இருந்து கீழே
விழுந்ததைபோல நொறுங்கிய நாட்கள்
மனதுக்கு பிடித்த டீச்சரை
தேவதையாய் பார்த்து
பிடிக்காத பாடத்தையும்
விரும்பிய விந்தையான நாட்கள்
பருவத்தின் பரிபாஷைகள்
புரிந்தும் புரியாமல்
மயக்கம் கொண்ட மனதை அடக்க
முடியாமல் தவித்த பதினாறின் காலம்
நான் பெரிய ஆளு
என்னால் எல்லாம் முடியும் என
அடங்கா குதிரையின் ராஜாவைப்
போல வலம் வந்த காலம் அது
மொத்தத்தில் மலரும் முன் வாசம்
அத்தனையும் தனக்குள் ஒளித்து
வைத்திருக்கும் மொட்டின் வாசத்தை போல
சுகமான காலம் பள்ளி காலம்