பனித்துளி
- ரவிசங்கர் பழனிவேலு
விழித்துப் பார்த்தேன்
புல்வெளி மேல்
பனித்துளி
இப்பொழுதுதானே விடிந்தது
அதற்குள் வியர்வையா?
அழுதாயோ?
புற்களுக்கும் இலைகளுக்கும்
கண்களே இல்லை
கண்ணீர் மட்டும் பூத்தது எப்படி?
நீ அழுதது
சென்றுவிட்ட இரவுக்கா?
வந்துவிட்ட பகலுக்கா?
சோகங்களை சிநேகிதிகள்
இரகசியமாய் பகிர்ந்த போது
இறக்கி வைத்த சுமை துளிகளா?
வீசிய காற்று மறைமுகமாய்
கசிந்த கண்ணீர் பதிவுகளா?
இத்தனை அழகு இங்கு
வாய்விட்டு அழ
வாய்ப்பே இல்லை
கண்டிப்பாய் நீ
கண்ணீரை இறைத்திருக்க மாட்டாய்
இலவச நீர் போர்வையா?
இலை மேல் படிந்த நீர் மேகமா?
நகராமல் உறையாமல்
சிகரமாய் எழுந்த
பெய்யாத குட்டி மழையா?
விடிந்த பிறகும்
வடியாத ஒரு துளி வெள்ளமா?
யார் ஊதி வந்த
உடையாத, வண்ணம்
அடையாத நீர்க்குமிழி நீ?
இரவு வானில் இருந்து விண்மீன்கள்
இலைகள் மேல் இடம் பெயர்ந்தனவோ?
புலப்பட்டு விட்டது! புல்வெளி புரிந்த செயல்!!
எண்ணில்லா விண்மீன்களை
உன்னிப்பாய் பார்க்க
தன்னிகரில்லா தற்காலிக தொலைநோக்கியோடு
அண்ணாந்து பார்த்துவிட்டு
அனாதையாய் விட்டு சென்றதை
என்னான்னு சொல்ல?