கலையாத கனவுகள்.. கலாம் அய்யா!
தூக்கத்தின் உறவு முறையாய் தம்பட்டம்
அடித்த கனவுக்கு பாதைக் காட்டிய பண்டிதன்
படிப்பு வாசம் வீசாத காலத்தில்
படித் தாண்டி புத்தகத்தில் புரண்டாய்
பட்டத்திற்கு குறி வைத்து
உரி அடித்து உயரம் தொட்டாய்
பணிவில் பனியாய் பாசத்தில் நிலவாய்
உயரம் தொட்டும் அன்பின் இலக்கணமானாய்
சாலையோரக் கடையில் உணவு உண்டாய்
மனிதனாய் மனிதம் உணர்த்தி சென்றாய்
வண்ண நிறத்திலே சமூக நாடிப் பிடித்தாய்
வாடிய இடமெல்லாம் நம்பிக்கை நீர் ஊற்றினாய்
வரவு இருந்த இடத்தில் கூட வரம்பு மீறாது இருந்தாய்
தகரப் பெட்டியோடு தரணி ஆண்டாய்
விண்கலம் செலுத்தி சவால் விட்டாய்
விடியாத பக்கம் எல்லாம் விடியக் கனவு கண்டாய்
பள்ளி பள்ளியாய் சென்றாய் - கனவை
பிஞ்சு இதயத்தில் விதைத்தாய்
தமிழ் தமிழ் என சுற்றி திரிந்தாய்
தமிழனைத் தரணியும் தாங்க செய்தாய்
இறுதி மூச்சிலும் இளைஞனையே குறி வைத்தாய்
நீ இல்லாத உலகத்திலும் விண்ணைத் தாண்டிய
கனவை விதைத்தாய் - வீழாது உன் கனவு நனவாகுகையில்
பிறந்திடு இன்னொரு பிறப்பு
- சிவமணி, வத்தலக்குண்டு