சாத்தான்குளத்தின் கொடுமையின் உச்சம்.. திமுக முன்னாள் எம்எல்ஏ கொ.வீ.நன்னன் உருக்கமான கவிதை!
தூத்துக்குடி: சாத்தான்குளத்தின் கொடுமையின் உச்சம் என்ற தலைப்பில் முன்னாள் திமுக எம்எல்ஏ கவிஞர் கொ.வீ.நன்னன் உருக்கமான கவிதை ஒன்றை இயற்றி உள்ளார்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலியானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. நேற்று எஸ்ஐ ராகுகணேஷ் கைது அடுத்தடுத்து நான்கு போலீசார் இதில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் செங்கம் தொகுதியின் முன்னாள் திமுக எம்எல்ஏ கவிஞர் கொ.வீ.நன்னன் இது தொடர்பாக கவிதை இயற்றி இருக்கிறார். சாத்தான்குளத்தின் கொடுமையின் உச்சம் என்ற தலைப்பில் இந்த கவிதையை அவர் இயற்றி உள்ளார்.
சாத்தான்குளத்தின் கொடுமையின் உச்சம்
1) சாத்தான்குளம் காவலர்கள் செய்திட்ட கொடூரத்தின்
செய்தியை கேட்டுத் துடித்தோம்
சாகடிக்கும் நோக்கத்தில் தந்தைமகன் இருவரையும்
நோகடித்த தாலே பதைத்தோம்
மாற்றாருடன் முரண்படின் வழக்காடு மன்றத்தில்
நடுவரிடம் முறையும் இடுவார்
மாசுளதா இல்லையாவென் ராராய்ந்து இறுதியில்
மாசிருப்பின் சிறையில் இடுவார்
கூற்றாக மாறியிவர் கொடுமையின் உச்சியில்
கொண்டுபோய் அறையி லடைத்தார்
கொன்றிடும் எண்ணத்தில் கொஞ்சமும் இரங்காமல்
குருதிவரும் வரையில் அடித்தார்
ஆற்றாமை யாலிருவர் அழுதனர் தொழுதனர்
அச்சத்தின் பிடியில் துடித்தார்
அம்மணக் கோலமாய் ஆக்கியேத் தாக்கிஉயிர்
போக்கிட போட்டு முடித்தார்
2) கண்ணினை காக்குமிமை கத்தியாய் மாறியே
கண்களை குத்தும் நிலையா?
கைகளில் தடியொன்று இருந்திடில் காண்போரை
கடித்திட கற்றக் கலையா?
புண்ணினை ஆற்றிட போட்டிடும் மருந்துகள்
நஞ்சானால் ஆறி விடுமா?
புடம்போட்ட பொன்னினை இடம்மாற்றி வைப்பினும்
பொலிவினை இழந்து கெடுமா?
மண்ணினைக் காத்திடும் மாபெரும் கடல்நீர்
பொங்கிடில் வீழும் உலகம்
மனதினை கட்டுக்குள் வைத்திடில் எப்போதும்
வருவது இல்லை கலகம்
எண்ணிடும் எண்ணங்கள் தூய்மையாய் வாய்மையாய்
அமைந்திடில் துன்பம் வருமா?
எளியோரை வலியோர்கள் எப்போதும் தண்டித்தால்
கண்டித்தால் இன்பம் தருமா?
3) நடந்திடும் கொடுமைகள்; இழந்திடும் இழப்புகள்
நாளுக்கு நாள் பெருகுது
நண்பனென் றுரைத்தவர் நம்பகத் தன்மையை
நடிப்பென உளம் வெடிக்குது
குடந்தனில் விளக்கினை வைக்கலாம் ஒளியினை
மூடியே மறைத்தும் விடலாம்-நுனிக்
கொம்பிலே அமர்ந்துகொண் டடிக்கிளையை வெட்டிடின்
வீழலாம் மீண்டும் எழலாம்
நடந்திடும் கொடியதோர் நிகழ்வினை கண்களில்
காண்பதை ஒளிப்ப தெதற்கு?
நாடகம் ஆடியே நாலுபேர் கூடியே
நரித்தனம் செய்வ தெதற்கு?
உடந்தையாய் இருந்தவர் ஊழலைப் புரிந்தவர்
ஒப்புதல் தரம றுத்தால்
உலகமே காறியேத் துப்பிடும் வெறுத்திடும்
உறவுகள் விலகும் சினத்தால்