அமெரிக்காவில் ஒர் கவிதைத் திருவிழா.. ஈரோடு தமிழன்பனுக்கு 'மகாகவி' பட்டம்!
டல்லாஸ்(யு.எஸ்): மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் 1000 கவிதைகளை வாசிக்கும் கவிதைத் திருவிழா டல்லாஸில் நடைபெற்றது.
ஈரோடு தமிழன்பன் தொலைபேசி வழியாக, வாழ்த்துக் கவிதையால் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். புதுச்சேரி ஒருதுளிக் கவிதை மையத்தின் சார்பில் அமிர்தகணேசன் தலைமை ஏற்று கவிதைத் திருவிழாவை நடத்தி வைத்தார்.
"கவிஞர்கள் வாழும் காலத்திலே, அவர்களுடைய படைப்புகள் இப்படி ஒரு பெரும் நிகழ்வாக அரங்கேற்றப்படுவது, மிகவும் பெருமைக்குரியதாகும். கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு இத்தகைய சிறப்பைச் செய்த மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் பாராட்டுக்குரியவர்கள்.
வார இறுதியில் நேரம் ஒதுக்கி, இங்கு வந்து நேரிலும், தொலைபேசியிலும் கவிதை வாசிக்கும் அமெரிக்கத் தமிழர்களின் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது. தமிழ் கவிதைகளுக்கு அமெரிக்காவில் இத்தனை வரவேற்பு கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று அமிர்தகணேசன் கூறினார்.
ஈரோடு தமிழன்பன் பற்றிக் கவிஞர் இன்குலாப் எழுதிய கவிதையை வாசித்து முனைவர் சித்ரா மகேஷ் கவிதை வாசிப்பைத் தொடங்கி வைத்தார்.
தமிழ் ஆர்வலர்கள் பலரும் வருகை தந்து கவிதைகளை வாசித்தனர். 8 வயது சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை பங்கு பெற்றனர். தொலைபேசி வழியாகவும் பலர் கலந்து கொண்டனர் . பங்கேற்பாளர்களின் ஆர்வத்தினால் ஆயிரம் கவிதைகளுக்கும் மேலாகவே வாசிக்கப்பட்டது.
ஈரோடு தமிழன்பனின் கவிதைகளை, அமிர்தகணேசன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதிய " The Essential Erode Tamilanban " என்ற ஆங்கிலப் புத்தகமும் வெளியிடப்பட்டது.
ஹைக்கூ நூற்றாண்டை முன்னிட்டு கனடாவைச் சார்ந்த கவிஞர் உமை பற்குணரஞ்சன் அவர்களின் கவிதை நூலும் வெளியிடப்பட்டது.
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஈரோடு தமிழன்பனுக்கு 'மகாகவி' என்ற பட்டம் வழங்கப்பட்டது
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி, வரவேற்றார். நியூயார்க்கைச் சார்ந்த சண்முகம் பெரியசாமி மற்றும் குறளரசி கீதா அருணாச்சலம் தலைமை தாங்கினார்கள். முனைவர் சித்ரா மகேஷ் தொகுத்து வழங்கினார். கிருஷ்ணராஜ் நன்றியுரை ஆற்றினார்.
டல்லாஸில் நடைபெற்ற ' ஈரோடு தமிழன்பன் கவிதைத் திருவிழா தான் அமெரிக்காவிலேயே நடைபெற்ற முதல் கவிதைத் திருவிழா என்று கூறப்படுகிறது.