வலிகள் வந்தாலும்.. வாழும் வழிகளை கற்றுக் கொடுத்தவள்.. அம்மா!
சென்னை: எத்தனை வலிகள் வந்தாலும் வலிகளை மறக்க வழிகளை கற்றுக் கொடுத்தவள் அம்மா. எத்தனை தோல்விகளில் துவண்டாலும் தோள் கொடுத்து தோழியாய் நின்றது அம்மா. தடைகள் என்னை தடுத்தாலும் வீர நடை போட கற்றுத் தந்தவர் அம்மா.
அம்மா என்றாலே பாசம்.. அம்மா என்றாலே அரவணைப்பு.. ஆம் என் அம்மா.. நம்பிக்கையின் ஊற்று. மதத்தைத் தாண்டிய காதலுக்கு என் அப்பாவுக்கு கிடைத்த பொக்கிஷம். எங்களுக்குக் கிடைத்த வரம், கலப்பு திருமணத்தின் தடைகளைக் கடந்து எங்களை வளர்த்தவர்.
என் அம்மா பீடி சுற்றும் தொழிலாளி. இரவு பகல் பாராமல் ஓயாது உழைப்பவர். நினைவில் உள்ளது அம்மா.. எங்கே தூங்கும் குழந்தைகள் எழுந்து விடக் கூடாதே என்று மண்ணெண்ணெய் விளக்கில் பீடி சுற்றி கொண்டிருப்பீர்கள். மறு நாள் எழுந்து வேலைகளை முடித்து எங்களை பள்ளிக்கு அனுப்பி விட்டு பீடி கட்டுக்களை சரி பார்த்து அடுக்கி வைத்து பீடிக் கடைக்கு கொண்டு செல்வார்.
கால் நோக நடந்தே செல்வார்.. நோக்கம் ஒன்றே பெரிது அவருக்கு வலியல்ல.. வழியை அவரே அமைத்து நேர்கொண்ட நடை போடுவார். எனக்கு பாரதி கண்ட புதுமைப் பெண். எதையும் எதிர்பார்க்காத மனது.. எதற்கும் ஆசைப்படாத மனது. இதுவரை எதையும் ஆசைப்பட்டு வாங்கியது இல்லை..
தேவைகளை களைந்த தேவதை. வருங்காலத்தில் கேள்விகளுக்கு பதில் தேடும் களமாக உழைப்பை நம்பினார்.
ஊருக்காக வாழாது தன் மனதுக்காகவும் தன்மானத்துக்காகவும் வாழ்பவர். அடிக்கடி எங்க அம்மா சொல்கின்ற ஒரே வார்த்தை "யாருக்கும் பயப்படக் கூடாது.. தப்பு பண்ண மட்டும்தான் பயப்படணும்.. கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பயந்து வாழணும்.. நேர்மையா வாழணும்.."
வாழ்க்கையோட தத்துவத்தை எளிமையாக புரிய வைத்தவர்.. கண்டிப்பு பாசம் அரவணைப்பு அனைத்தும் ஒருங்கே பெற்றவர். உலகத்துல எல்லா அம்மாவுக்கும் குழந்தைகள்தான் உலகமே.. குழந்தை அழுதால் துடிப்பதும் அம்மாதான்.. கண்ணீரைத் துடைப்பதும் அம்மாதான்.
அம்மா எப்பவுமே கண்டிப்புதான்.. எப்பவுமே ஏதாவது திட்டிட்டே இருக்கிற மாதிரி தெரியும்.. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அம்மா சொல்றதுதான் சரின்னு தோணும்.
அம்மா என்றால் நம்பிக்கைதான்
அம்மா என்றால் அரவணைப்பு
அன்பின் உருவம்
அதிகாரத்தின் அடையாளம்
அன்பும், அதிகாரமும் ஒருங்கே பெற்றவளே
அனைவரின் தாய்.
அன்பைக் கொடுத்து, குடும்பத்தை காத்து வீட்டிலும் நாட்டிலும் ஆட்சி புரிபவளே அன்னை.
- ஏ. காயத்ரி.