சீக்கிரம் எழு- சிறகு விரி- சக்கராயுதம் சுழற்று.. கருணாநிதிக்கு வைரமுத்து வாழ்த்து Exclusive
திமுக தலைவர் கருணாநிதிக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து கவிதை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, கவிஞர் வைரமுத்து சிறப்பு வாழ்த்து கவிதை ஒன்றை இயற்றியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 35 ஆண்டுகளாக அவருடன் நட்பு பாராட்டி வரும் கவிப்பேரரசு வைரமுத்து, கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து கவிதை ஒன்றை இயற்றியுள்ளார்.
'வாழையடி வாழைகளை வாழவை வா' என்ற தலைப்பில் அவர் இயற்றியுள்ள அந்த கவிதை பின்வருமாறு:
வாழையடி வாழைகளை
வாழவை வா
தமிழ்நாட்டுக்குச் சங்கீதமில்லை
நீ மெளனித்திருக்கிறாய்
வீதிகளில் மணியோசை இல்லை
நீ வீட்டில் இருக்கிறாய்
அதிகாலை எழுப்பும் அலைபேசி இல்லை
நீ சயனித்திருக்கிறாய்
கவியரங்குகளில் கரவோசை இல்லை
விரல்களுக்கு விடுமுறை தந்திருக்கிறாய்
ஞானத்தின் நிசப்தமாய் நீயிருக்கிறாய்
சிங்கம் செய்தித்தாள் வாசிக்கவில்லை
தலையே இல்லாமல் தலைப்புச் செய்திகள்
ராஜாளிக்கு உடல்நலமில்லை
ஊர்க்குருவிகளின் ரகளை ஓயவில்லை
உறைந்துபோன காலத்தை
உற்றுப் பார்ப்பதுபோல்
உன்னையே பார்க்கிறேன்
தமிழ்நாடு கிடந்தது
அதோ அந்த ஐவிரல் இடுக்கில்
முத்தமிழ் கிடந்தது
உன் மூளையின் முடுக்கில்
காலம் நடந்தது
உன் கண்களின் அசைவில்
மலைகள் மண்டியிட்டன
காற்று தகவல் சொன்ன உன்
காலடி ஓசையில்
டெல்லியில் ஊரடங்கு உத்தரவு
நீ துண்டை உதறிய
தொலைக்காட்சி பார்த்து
இன்று
ஞானத்தின் நிசப்தமாய்
நீயிருக்கிறாய்
எப்போதாவது உன் ஓரக்கண்ணில்
அபிநயம் பிடித்தபடி
ஒரு துளி வழிகிறது
அது
நிகழ்காலத்தின்
துக்கமாகவல்ல
எதிர்காலத்தின்
ஆனந்தக் குறியீடாய் ஆகட்டும் அய்யா
சீக்கிரம் எழு
சிறகு விரி
வாழையடி வாழைகளை
வாழவை வா
நாற்காலியிலிருந்தே
சக்கராயுதம் சுழற்று
கண்ணபிரான் நீ
அர்ச்சுனன் தளபதி"
இவ்வாறு அந்த வாழ்த்து கவிதையை கவிப்பேரரசு வைரமுத்து இயற்றியுள்ளார்.