For Quick Alerts
For Daily Alerts
Just In
"நீரின்றி அமையாது உன் உலகு".. மீண்டும் என்னை தேடி வருவாய்!
சென்னை:
வரமாக என்னுள் வந்தாய்
பாரம் ஏதும் இல்லையடா
சொல்ல வார்த்தை ஏதும் இல்லையடா
உலக பயணத்தை தொடங்கி விட்டாய்
உலகத்தின் வாசலை எட்டிப் பிடித்து விட்டாய்
எட்டிப் பிடித்து விடு வானத்தை
தூரங்கள் நீ சென்றாலும்
உன் ஈர நரம்புகள் என்னோடு
என்னை இறுகப் பிடித்துக்கொண்டு
அஞ்சாதே மகனே
தென்றல் காற்று வீசும்
மயங்காதே
காட்டுப் புயல் வீசும்
கலங்காதே
இறுகப் பிடித்துக் கொள் நானிருக்கிறேன்
வளர்கிறாய் மகனே...
என்னைத்தாண்டி வளர்கிறாய்....
ஆனால் உன் அன்பு மட்டும் என்னோடு
சொந்தக்காலில் நிற்கிறாய்
எதையும் எதிர் கொண்டு எதிர்க்கிறாய்...
வந்தோரை வாழ வைக்கிறாய்
உன் அன்பு வேரை இன்னும் ஆழமாக
காலம் ஓடுகிறதடா!
ஏனோ உன்னில் ஒரு வாட்டம்!
பசுமை இழந்தாயடா !
என்னதான் ஆனது உனக்கு?
உன் ஈர நரம்புகளில் ஈரமில்லை... சோர்ந்து விடாதே மகனே!
என் குருதியை இரையாக்குவேன் உனக்கு
கலங்காதே
வாழவைத்த உனக்கு...
வாழ வழி இல்லை...
இறுகப் பிடித்துக் கொள் நானிருக்கிறேன்...
சோர்ந்து போகிறேனடா!
தேடிப்பார்க்கிறேன் எங்கும்
வெற்றிடம் ...
நீ வாழ வழி தேடி விழிகளில் வழிகிறதடா கண்ணீர் ...
உன் நரம்புகள் வலுவிழக்கிறதா?அஞ்சாதே நானிருக்கிறேன்...
வீழ விடுவேன் என்று நினைத்தாயோ?
விழ உதித்தவன் அல்ல நீ
வெல்ல பிறந்தவனடா...
என்ன சத்தம் ...
விலைபேசும் மானிடர்கள்...
உன் விதியை மாற்ற சதியோ...
அற்ப மானிடர்கள்...
பணம் இருந்தால் மதிக்கும் வலுவிழந்தால் மிதிக்கும் தேவைப்பட்டால் காலில் விழும்
தேவை களைந்தால் தூக்கி எறியும்...
நீ அஞ்சாதே ...
பிடித்துக்கொள்
"நீரின்றி அமையாது நம் உலகு "
கலை இழந்து விட்டாயடா!
உன் ஆகாரத்திற்கும் கூட ஆசைப்பட்ட மானிடம்!
துளிகூட மிச்சம் வைக்கவில்லை !
சேர்க்கவும் மாட்டார்கள் ...கொடுக்கவும் மாட்டார்கள்...
கிடைத்ததையெல்லாம் உறிஞ்சும் உத்தமர்கள் !
இறுகப் பிடித்துக் கொள் கண்மணியே !எதுவாகிலும் உன்னை விடமாட்டேன் ...
என்ன மீண்டும் சத்தம்
அம்மா ! அம்மா !
வேண்டாம்! வேண்டாம்!
விட்டு விடுங்கள்
மானிடர்களே!
வெட்டி வீழ்த்தி விட்டீர்கள்
என் இதயத்தை அறுத்து எறிந்து விட்டீர்கள் !
வீழ்ந்தது "என் தலைமுறை" அல்ல
"உன் தலைமுறை "
"நீரின்றி அமையாது உன் உலகு"
மீண்டும் என்னை தேடி வருவாய்
என் மகனை நீயே உயிர்பிப்பாய்...
அப்போதே உன் சாபம் தீரும்...
- பூமித்தாய்
கவிதை: காயத்ரி.ஏ.
வெல்வது முக்கியமில்லை.. வீரர்களே எப்போதும் வெல்வதுமில்லை.. போரிடுவதே முக்கியம்!
Comments
English summary
World environment day today and a poem from our reader.